انْطَلَقْتُ أَنَا وَعَمْرُو بْنُ الْعَاصِ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ وَمَعَهُ دَرَقَةٌ ثُمَّ اسْتَتَرَ بِهَا، ثُمَّ بَالَ، فَقُلْنَا: انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ، فَسَمِعَ ذَلِكَ، فَقَالَ: «أَلَمْ تَعْلَمُوا مَا لَقِيَ صَاحِبُ بَنِي إِسْرَائِيلَ، كَانُوا إِذَا أَصَابَهُمُ الْبَوْلُ قَطَعُوا مَا أَصَابَهُ الْبَوْلُ مِنْهُمْ، فَنَهَاهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ»
22. அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) கூறியதாவது:
நானும், அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கச் சென்றோம். நபியவர்கள் தோலினால் செய்யப்பட்ட கேடயமொன்றைத் தம்மோடு எடுத்துக்கொண்டு வெளியில் சென்றார்கள்.
பின்னர் (மறைக்க வேண்டிய உறுப்புகளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக) அதனை மறைப்பாகப் பயன்படுத்திச் சிறுநீர் கழித்தார்கள். (இதனைக் கண்ணுற்ற) நாங்கள், “பெண்கள் சிறுநீர் கழிப்பது போன்று இவர்கள் (நபியவர்கள்) சிறுநீர் கழிப்பதைப் பாருங்களேன்” என்று பேசிக் கொண்டோம்.
இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பனூ இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட கதியை நீங்கள் அறியவில்லையா? அவர்கள் உடலில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும் (தண்ணீரால் கழுவி விடுவதால் அசுத்தம் நீங்காது)” என்று கட்டளையிடப்பட்டிருந்தனர்.
பனூஇஸ்ரவேலர்கள் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தும் போது அவர்களில் ஒருவர் இதைத் தடுத்தார். (அதனால்) அவர் இறந்த பின் மண்ணறையில் வேதனை செய்யப்பட்டார்”.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்த நபிமொழி (அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா மூலம் அறிவிக்கப்படுவதைப் போன்று) அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) மூலமாகவும் அறிவிக்கப்படுகிறது. (அதிலும் இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் உள்ளன).
மன்ஸூர் மூலமாக வரும் அறிவிப்பில், “அவர்கள் (பனூ இஸ்ரவேலர்கள்) தோலை வெட்டுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆஸிம் வழியாக வரும் அறிவிப்பில், அவர்கள் உடம்பை வெட்டுவார்கள் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. (இங்கு தோலாடை என்று பொருள் கொள்ள வாய்ப்பில்லை)