🔗

அபூதாவூத்: 285

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ خَتَنَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ، فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنْ هَذَا عِرْقٌ، فَاغْتَسِلِي وَصَلِّي»


285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும்; அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் (இஸ்திஹாளா எனும்) அதிக இரத்தப்போக்கு நோய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், “இது மாதவிடாய் இரத்தமல்ல. இது நரம்பிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும். ஆகவே, குளித்துவிட்டுத் தொழுதுகொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(இந்த நபிமொழி இருபத்து நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பை இவர்களிடமிருந்து அறிவிக்கும் உர்வா, அம்ரா ஆகியோரிடமிருந்து ஜுஹ்ரீ வழியாக அவ்ஸாயீ அறிவிக்கும் போது, “அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் மனைவி உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் ஏழு ஆண்டுகள் அதிக இரத்தப் போக்கு நோய்க்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் (வழக்கமான) மாதவிடாய் நாள்கள் வந்துவிட்டால் தொழுகையைத் தவிர்த்துவிடு. (வழக்கமான) மாதவிடாய் நாள்கள் முடிந்துவிட்டால் (இரத்தம் வந்து கொண்டிருந்தாலும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கட்டளையிட்டார்கள்” என (அவ்ஸாயீ) கூடுதலாக அறிவிக்கின்றார்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் அவ்ஸாயீ (ரஹ்) தவிர வேறு யாரும் இந்தக் கூடுதல் விஷயத்தைக் குறிப்பிடவில்லை. இந்த நபிமொழியை அம்ரு பின் அல்ஹாரிஸ், லைய்ஸ், யூனுஸ், இப்னு அபீ திஉபு, மஅமர், இப்ராஹீம் பின் ஸஅத், சுலைமான் பின் கஸீர், இப்னு இஸ்ஹாக், ஸுஃப்யான் பின் உயைனா ஆகிய இத்தனை அறிவிப்பாளர்களும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். இவர்களின் அறிவிப்பில் அவ்ஸாயீ அவர்கள் கூறிய கூடுதல் விஷயம் இடம்பெறவில்லை. இதை அறிவிப்பதில் அவ்ஸாயீ தனித்துள்ளார்.

இது ஹிஷாம் தன் தந்தை உர்வாவிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் வாசகமாகும். (ஆயிஷா (ரலி) யிடமிருந்து உர்வா மூலம் ஜுஹ்ரி அறிவிக்கும் ஹதீஸ் வாசகமல்ல)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

மூன்றாம் அறிவிப்பில், “மாதவிடாய் நாள்கள் வந்துவிட்டால் தொழுகையைத் தவிர்த்துவிடு. மாதவிடாய் நாள்கள் முடிந்ததும்,
குளித்துவிட்டுத் தொழுதுகொள்” என்ற கூடுதல் விஷயம், ஆயிஷா (ரலி) அவர்களைத் தொடர்ந்து ஹிஷாம் பின் உர்வா வழியாக வரும் அறிவிப்பில் ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் மூலம் கூறப்பட்ட விஷயமாகும்.

இப்னு உயைனா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “மாதவிடாய் நாள்களில் தொழுகையைத் தவிர்த்துவிட வேண்டும்” என நபி (ஸல்) கட்டளையிட்டார்கள் என்பது இப்னு உயைனாவின் எண்ணமாகும். (இந்தப் பகுதியை யாரும் கூறவில்லை).

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

“அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் மட்டும் மேலதிகமாக அறிவித்த-முன்சென்ற அறிவிப்புக்கு ஸுஹ்ரீ அவர்கள் மூலம் முஹம்மது பின் அம்ர் அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் எண்-286 இன் வார்த்தைகள் ஒத்திருக்கின்றன.

(குறிப்பு: அபூதாவூத் இமாம் அவர்கள் இவற்றை குறிப்பிடுவதின் காரணம், அவ்ஸாயீ, இப்னு உயைனா, முஹம்மது பின் அம்ர் ஆகியோர் கூடுதலான வார்த்தைகளை அறிவித்துள்ளனர். மற்றவர்கள் இவ்வாறு அறிவிக்கவில்லை என்பதால் இவர்களின் கூடுதலான வார்த்தைகள் தவறாகும் என்பதாகும்)