🔗

புகாரி: 1361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ مَرَّ بِقَبْرَيْنِ يُعَذَّبَانِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ»، ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا بِنِصْفَيْنِ، ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ صَنَعْتَ هَذَا؟ فَقَالَ: «لَعَلَّهُ أَنْ يُخَفَّفَ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا»


பாடம்: 81

அடக்கத் தலத்தில் ஈரமான பேரீச்ச மட்டையை நட்டுவைப்பது.

புரைதா பின் அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள், தமது அடக்கத்தலத்தில் இரண்டு பேரீச்சமட்டைகளை நட்டுவைக்குமாறு இறுதி விருப்பம் தெரிவித்தார்கள்.

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்களது அடக்கத்தலத்தின் மீது கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த இப்னு உமர் (ரலி) அவர்கள், (ஒரு சிறுவனிடம்), “சிறுவரே! இதை அகற்றிவிடும்! அவருக்கு அவருடைய நற்செயல்கள் தான் நிழல் கொடுக்கும்” எனக் கூறினார்கள்.

காரிஜா பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் உஸ்மான் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் இளைஞர்களாக இருந்தோம். அப்போது யார் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களது அடக்கத்தலத்தைக் குதித்துத் தாண்டுகிறாரோ அவரே எங்களில் அதிக தூரம் குதித்துத் தாண்டுபவராயிருந்தார்.

உஸ்மான் பின் ஹகீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: காரிஜா எனது கையைப் பிடித்து என்னை ஒரு அடக்கத்தலத்தின் மீது உட்கார வைத்துவிட்டு, “அடக்கத்தலத்தின் மீது அசுத்தம் செய்பவராக அமர்வதுதான் வெறுக்கத்தக்கது” எனத் தம் தந்தையின் சகோதரர் யஸீத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றார்.

“இப்னு உமர் (ரலி) அவர்கள் அடக்கத்தலங்கள் (கப்று)மீது உட்காருபவராக இருந்தார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


1361. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இருவரின் அடக்கத்தலங்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால், ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ, சிறுநீர் கழிக்கும்போது (உடலை) மறைக்காதவர்; இன்னொருவரோ கோள்சொல்லித் திரிந்தவர்” என்று கூறினார்கள்.

பின்னர் ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 23