🔗

புகாரி: 1915

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


பாடம் : 15 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது! அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்! நீங்கள் இரகசியமாகத் தம்மைத்தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்! அவன் உங்கள் பிழைகளைப் பொறுத்து, உங்களை மன்னித்தான். எனவே, இனி (நோன்புக் கால இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி, அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்! என்ற  (2: 187ஆவது) இறைவசனம்.

1915. பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்; அவரின் மனைவி, ‘இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!’ என்றார்.

கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்றார். நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும்

‘இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.
Book : 30