🔗

புகாரி: 2228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ فِي السَّبْيِ صَفِيَّةُ فَصَارَتِ الى دَحْيَةَ الكَلْبِيِّ، ثُمَّ صَارَتِ الى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம் : 107 யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றிய போது அவர்களின் நிலத்தை விற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது.

இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு (நபிமொழி) அறிவிப்பு உள்ளது.

பாடம் : 108 உயிரினத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது.

ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களைக் கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.

சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்து விட்டு, மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்! என்று கூறினார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம் இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று கடனாக வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத்தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2228. அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பி(ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு நபி(ஸல்) (அவர்கள் தங்களின் பங்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள) அவர்களுக்கு உரியவர்களாய் ஆகிவிட்டார்கள்!’ (பார்க்க: பின்குறிப்பு)
Book : 34