🔗

புகாரி: 2405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أُصِيبَ عَبْدُ اللَّهِ، وَتَرَكَ عِيَالًا وَدَيْنًا، فَطَلَبْتُ إِلَى أَصْحَابِ الدَّيْنِ أَنْ يَضَعُوا بَعْضًا مِنْ دَيْنِهِ فَأَبَوْا، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَشْفَعْتُ بِهِ عَلَيْهِمْ، فَأَبَوْا، فَقَالَ: «صَنِّفْ تَمْرَكَ كُلَّ شَيْءٍ مِنْهُ عَلَى حِدَتِهِ، عِذْقَ ابْنِ زَيْدٍ عَلَى حِدَةٍ، وَاللِّينَ عَلَى حِدَةٍ، وَالعَجْوَةَ عَلَى حِدَةٍ، ثُمَّ أَحْضِرْهُمْ حَتَّى آتِيَكَ»، فَفَعَلْتُ، ثُمَّ جَاءَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَعَدَ عَلَيْهِ، وَكَالَ لِكُلِّ رَجُلٍ حَتَّى اسْتَوْفَى، وَبَقِيَ التَّمْرُ كَمَا هُوَ، كَأَنَّهُ لَمْ يُمَسَّ


பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்ய (குறைத்துக் கொள்ள) பரிந்துரை செய்தல்.

2405. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும் போது) பல குழந்தை குட்டிகளையும் கடனையும் விட்டுச் சென்றார்கள். எனவே, (அந்தக் கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து) விடும்படி கடன்காரர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டார்கள்.

எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கடன் காரர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யும்படி கேட்டேன். (நபியவர்கள் அவ்வாறே பரிந்துரை செய்தும்) அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பேரீச்சங் கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித் தனியாகப் பிரித்து வையுங்கள். ‘இத்க் இப்னு ஸைத்’ என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் ‘லீன்’ என்னும் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் ‘அஜ்வா’ என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக எடுத்து வையுங்கள்.

பின்னர் கடன் காரர்களை வரவழையுங்கள். பிறகு, நான் உங்களிடம் வருகிறேன்’ என்றார்கள். நான் அவர்கள் கூறியபடியே செய்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்ச குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு (கடன்காரர்) ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். இறுதியில், நிறைவாக (அனைவருக்கும்) கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன் பிருந்ததைப் போன்றே (சற்றும் குறையாமல்) அப்படியே இருந்தது.
Book : 43