🔗

புகாரி: 2406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

وَغَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاضِحٍ لَنَا، فَأَزْحَفَ الجَمَلُ، فَتَخَلَّفَ عَلَيَّ، فَوَكَزَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَلْفِهِ، قَالَ: «بِعْنِيهِ وَلَكَ ظَهْرُهُ إِلَى المَدِينَةِ»، فَلَمَّا دَنَوْنَا اسْتَأْذَنْتُ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَمَا تَزَوَّجْتَ: بِكْرًا أَمْ ثَيِّبًا “، قُلْتُ: ثَيِّبًا، أُصِيبَ عَبْدُ اللَّهِ، وَتَرَكَ جَوَارِيَ صِغَارًا، فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ، ثُمَّ قَالَ: «ائْتِ أَهْلَكَ»، فَقَدِمْتُ، فَأَخْبَرْتُ خَالِي بِبَيْعِ الجَمَلِ، فَلاَمَنِي، فَأَخْبَرْتُهُ بِإِعْيَاءِ الجَمَلِ، وَبِالَّذِي كَانَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَكْزِهِ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَوْتُ إِلَيْهِ بِالْجَمَلِ، فَأَعْطَانِي ثَمَنَ الجَمَلِ وَالجَمَلَ، وَسَهْمِي مَعَ القَوْمِ


2406. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

(பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது வாகனித்தவனாக நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்து கொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கிவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அறைந்து, ‘இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன் மீது சவாரி செய்து நீ வரலாம்’ என்று கூறினார்கள்.

நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, ‘இறைத்தூதர் அவர்களே! சமீபத்தில்தான் திருமணம் நடந்தது’ என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? வாழ்ந்த அனுபவமுள்ள (விதவையான அல்லது விவாகரத்து பெற்ற) பெண்ணையா?’ என்று கேட்டார்கள். நான், ‘வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று கூறினேன்.

பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘உன் வீட்டாரிடம் போ!’ என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய் மாமனிடம் ஒட்டகத்தை விற்று விட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்து விட, நபி(ஸல்) அவர்கள் அதைப் (பின்பக்கத்தில்) அறைந்ததையும் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச் செல்வங்களை வழங்கும்போது அதில் என்னுடைய பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.
Book :43