🔗

புகாரி: 2664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَهُ يَوْمَ أُحُدٍ، وَهُوَ ابْنُ أَرْبَعَ عَشْرَةَ سَنَةً، فَلَمْ يُجِزْنِي ثُمَّ عَرَضَنِي يَوْمَ الخَنْدَقِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، فَأَجَازَنِي»، قَالَ نَافِعٌ فَقَدِمْتُ عَلَى عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ وَهُوَ خَلِيفَةٌ، فَحَدَّثْتُهُ هَذَا الحَدِيثَ فَقَالَ: «إِنَّ هَذَا لَحَدٌّ بَيْنَ الصَّغِيرِ وَالكَبِيرِ، وَكَتَبَ إِلَى عُمَّالِهِ أَنْ يَفْرِضُوا لِمَنْ بَلَغَ خَمْسَ عَشْرَةَ»


பாடம் : 18 குழந்தைகள் பருவமடைவதும், அவர்களுடைய சாட்சியமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கேட்கிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59)

நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்த போது பருவமடைந்தேன் என்று சட்ட நிபுணர் முகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் பருவ வயதை அடைவது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதாகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப் போவதில்லை என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், (தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாத விலக்கு வரவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இது தான் .)

மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகின்றது. (65:4)

ஹஸன் பின் சாலிஹ் (ரஹ்) கூறினார்கள்: எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி 21 வயதிலெல்லாம் பாட்டியாகி விட்டதை நான் கண்டேன்.

2664. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்:

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர்(ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்’ என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்.
Book : 52