آيَةُ المُنَافِقِ ثَلاَثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ
பாடம் : 8 அல்லாஹ் கூறுகிறான்:
மரணமடைந்தவர் செய்திருந்த மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அவரது கடன் அடைக்கப்பட்ட பின்னரும் தான் (அவரது சொத்து வாரிசுகளிடையே மேலே விவரித்தபடி பங்கிடப்பட வேண்டும்). (4 : 12)
நீதிபதி ஷுரைஹ் (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ், தாவூஸ் , அதாஉ, இப்னு உதைனா (ரஹ்-அலைஹிம்) ஆகியோர், நோயாளி, தான் பட்ட கடனை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தருவது செல்லும் என்று அனுமதித்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் செய்யும் தருமங்களில் தகுதி மிக்கது அவன் உலக வாழ்வின் கடைசி நாளிலும் மறுமை வாழ்வின் முதல் நாளிலும் செய்யும் (மரண சாசன) தருமமேயாகும் என்று கூறினார்கள்.
இப்ராஹீம் நகஈ (ரஹ்), ஹகம் பின் உயைனா (ரஹ்) ஆகியோர் கூறினார்கள்:
மரணப்படுக்கையில் உள்ள நோயாளி ஒருவர், தன் வாரிசைக் கடனிலிருந்து விடுவித்து விட்டால் அவர் கடன் சுமையிலிருந்து விடுபட்டு விடுவார். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் ஃபஸாரிய்யா குலத்தைச் சேர்ந்த தமது மனைவியிடம், அவரது வீட்டில் இருப்பவற்றை (அவரே வைத்துக் கொள்ளும்படியும்) மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று(ம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்தார்கள்.
ஒருவன் தன் மரண வேளையில் தன் அடிமையைப் பார்த்து உன்னை நான் விடுதலை செய்து விட்டேன் என்று கூறினால் அது செல்லும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு பெண் தன் மரண வேளையில் என் கணவன் எனக்குத் தர வேண்டியதைத் தந்து (கடனை) அடைத்து விட்டார். நான் அதை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு விட்டேன் என்று கூறினால் அது செல்லும் என்று ஷஅபீ (ரஹ்) கூறுகிறார்கள்.
மரணப்படுக்கையில் இருப்பவன், என் வாரிசுகளில் சிலருக்கு, நான் அவர் களிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது என்று வாக்குமூலம் தந்தால், (அவன் மற்ற வாரிசுகளுக்குக் குறைவாகவும் அந்தக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதிகமாகவும் தருவதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம் என்னும்) சந்தேகம் இருப்பதால் அவனது வாக்குமூலம் செல்லாது என்று சிலர் கூறினர்.
பிறகு, அத்தகைய வாக்குமூலத்தில் சிலவற்றை மட்டும் (விதிவிலக்காக) அனுமதிக்கலாம் என்று கருதி, (வாரிசுகளில்) ஒருவரது அடைக்கலப் பொருள் தன்னிடம் இருப்பதாகவும் அவரது பொருட்கள் சில தன்னிடம் இருப்பதாகவும் (கூட்டு வியாபாரத்தில்) அவரது முதலீடு தன்னிடம் இருப்பதாகவும் வாக்குமூலம் தந்தால் அது செல்லும் என்று கூறினர்.
ஆனால், நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (ஆதாரமின்றி) சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொண்ட பேச்சு தான் மிகப் பொய்யான பேச்சாகும் என்று கூறியுள்ளார்கள். அவர்கள், முஸ்லிம்களின் செல்வத்தை (அநியாயமாக) உண்பது கூடாது.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நயவஞ்சகனின் அடையாளம் யாதெனில், அவனிடம் அடைக்கலப் பொருள் (அல்லது பொறுப்பு) ஏதும் நம்பி ஒப்படைக்கப்பட்டால் அதில் அவன் மோசடி செய்வான் என்று கூறினார்கள்.
உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றை அதற்குரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று இறைவனே கூறுகிறான். (4: 58) இவ்வசனத்திலுள்ள உரியவர்கள் என்னும் சொல் வாரிசுகளைத் தான் குறிக்கும் என்றோ அல்லது மற்றவர்களைக் குறிக்கும் என்றோ இறைவன் குறிப்பிட்டுக் கூறவில்லை.
நயவஞ்சகனின் அடையாளம் குறித்த இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிட மிருந்து அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
2749. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 55