نَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَرِيبًا مِنِّي، ثُمَّ اسْتَيْقَظَ يَتَبَسَّمُ، فَقُلْتُ: مَا أَضْحَكَكَ؟ قَالَ: «أُنَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ يَرْكَبُونَ هَذَا البَحْرَ الأَخْضَرَ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ» قَالَتْ: فَادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَدَعَا لَهَا، ثُمَّ نَامَ الثَّانِيَةَ، فَفَعَلَ مِثْلَهَا، فَقَالَتْ مِثْلَ قَوْلِهَا، فَأَجَابَهَا مِثْلَهَا فَقَالَتْ: ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: «أَنْتِ مِنَ الأَوَّلِينَ»، فَخَرَجَتْ مَعَ زَوْجِهَا عُبَادَةَ بْنِ الصَّامِتِ غَازِيًا أَوَّلَ مَا رَكِبَ المُسْلِمُونَ البَحْرَ مَعَ مُعَاوِيَةَ، فَلَمَّا انْصَرَفُوا مِنْ غَزْوِهِمْ قَافِلِينَ، فَنَزَلُوا الشَّأْمَ، فَقُرِّبَتْ إِلَيْهَا دَابَّةٌ لِتَرْكَبَهَا، فَصَرَعَتْهَا، فَمَاتَتْ
பாடம் : 8 அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, வாகனத்திலிருந்து விழுந்து, இறந்து போனவரும் உயிர்த் தியாகிகளில் ஒருவரே.
அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், ஒருவர் அல்லாஹ்வை நோக்கியும் அவனுடைய தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தனது வீட்டை விட்டுப் புறப்பட்டு, பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் நேரிட்டு விட்டால் அவருக்கு நன்மை வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. (4:100)
2799. உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக் கொண்டே கண்விழித்தார்கள். நான், ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள்.
நான், ‘அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள். முன்பு கேட்டது போன்றே நானும் கேட்டேன். முன்பு பதில் சொன்னது போன்றே அவர்களும் பதில் சொன்னார்கள். நான், ‘அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினேன். அவர்கள், ‘முதன் முதலாகச் செல்பவர்களில் நீங்களும் ஒருவர் தாம்’ என்று கூறினார்கள்.
(உம்மு ஹராம்(ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் இப்னு மாலிக்(ரலி) தெரிவிக்கிறார்கள்:)
அவ்வாறே, தளபதி முஆவியா(ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (சைப்ரஸ் தீவில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) புறப்பட்டுப் போனார்கள். தம் படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு ஹராம்(ரலி) ஏறிக் கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
Book : 56