🔗

புகாரி: 3412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ

زَادَ مُسَدَّدٌ: «يُونُسَ بْنِ مَتَّى»


பாடம் : 33

(அல்லாஹ் கூறுகிறான்:)

உண்மையில், காரூன் மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்பு மீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால் கூட சிரமப்பட்டுத் தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம், நீ பூரித்துப் போய் விடாதே. ஏனெனில், பூரித்து விடுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்.

இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே. மேலும் அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பதைப் போல் நீயும் உபகாரம் செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை என்று கூறினார்கள்.

அதற்கவன், இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன! என்றான்- அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான், என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் (அவர்களைத் தண்டிக்கும் போது) அவர்களின் பாவங்கள் பற்றி கேட்கப்படுவதில்லை. (28:76-78)

தொடர்ந்து காண்க : 28:79-82ம் இறை வசனங்கள்

பாடம் : 34.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், மத்யன் வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை….(7:85-93)

மேலும், மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (இறைத்தூதராக) அனுப்பினோம். அவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும், அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (இன்று) உங்களை நல்ல நிலையில் நான் காண்கின்றேன். ஆனால் (விரைவில்) துன்பம் சூழும் ஒரு நாளின் வேதனை உங்களை பிடிக்குமோ? என நான் அஞ்சுகிறேன்…. (11:84-95)

மேலும், மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஜபை அனுப்பினோம். அவர் கூறினார்: என் சமூகத்தினரே! அல்லாஹ்வுக்கு அடி பணியுங்கள்! இறுதிநாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருங்கள். மேலும், பூமியில் அநீதியிழைத்துக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களாய்த் திரியாதீர்கள்….(29:36,37)

பாடம் : 35

அல்லாஹ் கூறுகிறான்:

திண்ணமாக, யூனுஸ் இறைத் தூதர்களில் ஒருவராய் இருந்தார். அவர் நிரம்பிய ஒரு கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைவு கூருங்கள். பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் அவர் (கடலில்) எறியப் படவேண்டியவரானார். இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது. அவரோ (தன்னைத் தானே) நொந்து கொண்டவராய் இருந்தார்.

அவர் இறைவனைத் துதிப்பவர்களில் ஒருவராய் இல்லாதிருந்தால் மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார். அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலை வெளியில் அவரை நாம் எறிந்தோம். பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது நிழலிட முளைக்கச் செய்தோம். பிறகு, அவரை ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களை வாழவிட்டோம்.(37:139-148)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் அதிபதியின் தீர்ப்பு வரும் வரை பொறுமையாய் இருங்கள். மேலும், மீன் மனிதர் (யூனுஸ் நபியைப்) போன்று ஆகிவிடாதீர்கள். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் (தம் இறைவனை) அழைத்ததை நினைவு கூருங்கள். (68:48)

3412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் (அலை) அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம். என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் முஸத்தத்(ரஹ்) தம் அறிவிப்பில், ‘யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விட’ என்னும் வாசகத்தை அதிகமாகக் கூறினார்கள்.
Book : 60