🔗

புகாரி: 4687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَجُلًا أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَأُنْزِلَتْ عَلَيْهِ: {وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ، وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ، ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114] قَالَ الرَّجُلُ: أَلِيَ هَذِهِ؟ قَالَ: «لِمَنْ عَمِلَ بِهَا مِنْ أُمَّتِي»


பாடம் : 6

பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக,நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும் எனும் (11:114 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுலஃப் எனும் சொல்லுக்கு ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம் என்று பொருள். ஸுலஃப் எனும் சொல்லிலிருந்து தான் அல் முஸ்தலிஃபா (இரவில் சிறிது நேரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் (மக்காவிலுள்ள ஓரிடத்திற்கு) வந்தது. அஸ்ஸுலஃப் எனும் இச்சொல்லுக்கு ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை என்ற பொருளும் உண்டு. (38:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுல்ஃபா என்பது நெருக்கம் என்ற பொருள் கொண்ட வேர்ச் சொல்லாகும். இஸ்தலஃபூ எனும் சொல்லுக்கு ஒன்று கூடினர் என்று பொருள். (26:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸ்லஃப்னா எனும் சொல்லுக்கு நாம் ஒன்று கூட்டினோம் என்று பொருள்.

4687. இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்.

ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், ‘இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும் தான்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 65