🔗

புகாரி: 4777

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ، إِذْ أَتَاهُ رَجُلٌ يَمْشِي، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الإِيمَانُ؟ قَالَ: «الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَلِقَائِهِ، وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ؟ قَالَ: «الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ المَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الإِحْسَانُ؟ قَالَ: الإِحْسَانُ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: ” مَا المَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا: إِذَا وَلَدَتِ المَرْأَةُ رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا، وَإِذَا كَانَ الحُفَاةُ العُرَاةُ رُءُوسَ النَّاسِ، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلَّا اللَّهُ: (إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنْزِلُ الغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ) ثُمَّ انْصَرَفَ الرَّجُلُ، فَقَالَ: «رُدُّوا عَلَيَّ» فَأَخَذُوا لِيَرُدُّوا فَلَمْ يَرَوْا شَيْئًا، فَقَالَ: «هَذَا جِبْرِيلُ جَاءَ لِيُعَلِّمَ النَّاسَ دِينَهُمْ»


பாடம்: 2

‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்

4777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.

அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.

‘‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கருப்பைகளில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்” (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)

பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை.

பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4

அத்தியாயம்: 65