كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ أَتَدْرِي أَيْنَ تَغْرُبُ الشَّمْسُ؟» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ العَرْشِ»، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ} [يس: 38] لَهَا ذَلِكَ تَقْدِيرُ العَزِيزِ العَلِيمِ
பாடம்: 35.
‘அல்மலாயிகா’ (ஃபாத்திர்) அத்தியாயம்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (35:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்மீர்’ எனும் சொல்லுக்கு ‘பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை’ என்பது பொருள். (35:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்கலா’ எனும் சொல்லுக்கு ‘(பாவச்) சுமை ஏற்றப்பட்ட (ஆத்மா)’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (35:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹரூர்’ எனும் சொல், இரவு நேர வெப்பத்தைக் குறிக்கும். (மற்றொரு சொல்லான) ‘சமூம்’ என்பது, பகல் நேர வெப்பத்தைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகின்றனர்: ‘அல்ஹரூர்’ என்பது, பகல் நேர வெயிலைக் குறிக்கும். (35:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராபீப்’ எனும் சொல்லுக்கு ‘அடர்ந்த கரிய நிறம் கொண்டவை’ என்பது பொருள்.
பாடம்: 36. ‘யாசீன்’ அத்தியாயம்.
…
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (36:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸ்ஸஸ்னா’ எனும் சொல்லுக்கு ‘நாம் வலுவூட்டினோம்’ என்று பொருள். (36:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யா ஹஸ்ரத்தன் அலல் இபாத்’ (அந்தோ! அடியார்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே!) என்பதன் கருத்தாவது: இறைத் தூதர்களை அவர்கள் பரிகாசம் செய்ததே அவர்களது நஷ்டத்திற்குக் காரணமாக அமைந்தது. (36:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் துத்ரிகல் கமர’ (சூரியன் சந்திரனை எட்டிப்பிடிக்க முடியாது) என்பதன் கருத்தாவது: சூரியன், சந்திரன் இரண்டில் ஒன்றின் ஒளி மற்றதன் ஒளியை மறைக்காது; அவற்றுக்கு அந்தத் தகுதியுமில்லை. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிக்குந் நஹார்’ (இரவு பகலை முந்த முடியாது) என்பதன் கருத்தாவது: இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக விடாது பின்தொடரும். (36:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஸ்லகு’ என்பதற்கு ‘(இரவு, பகல்) ஒன்றிலிருந்து மற்றொன்றை நாம் வெளியேற்றுகிறோம்; அவை ஒன்றோடொன்று சேராமல் தனியாகவே சென்றுகொண்டிருக்கின்றன’ என்று பொருள். (36:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிம் மிஸ்லிஹி’ எனும் சொற்றொடருக்கு, ‘அதைப் போன்ற கால்நடைகளை’ என்று பொருள். (36:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபாகிஹூன்’ எனும் சொல் இன்னோர் ஓதலில் ‘ஃபகிஹூன்’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘ஃபகிஹூன்’ என்பதற்கு ‘(இன்பத்தில் திளைத்து) மகிழ்பவர்கள்’ என்று பொருள். (36:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்தும் முஹ்ளரூன்’ எனும் சொற்றொடருக்கு ‘‘(சிலைவணங்கிகளுக்கு எதிரான) படைகளாக, (அந்தச் சிலைகளே) விசாரணை நாளில் ஆஜர் படுத்தப்படும்” என்று பொருள். ‘‘(36:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஷ்ஹƒன்’ எனும் சொல்லுக்கு ‘நிரப்பப்பட்ட’ என்பது பொருள்” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (36:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாயிருக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களின் சோதனைகள்’ என்று பொருள். (36:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யன்சிலூன்’ எனும் சொல்லுக்கு ‘வெளியேறுவார்கள்’ என்பது பொருள். (36:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மர்கதினா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் வெளியேறுமிடம்’ என்று பொருள். (36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்ஸைனாஹு’ எனும் சொல்லுக்கு ‘நாம் எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்துள்ளோம்’ என்று பொருள். (36:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மகானத்திஹிம்’ எனும் சொல்லும், ‘மகானிஹிம்’ எனும் சொல்லும் (‘அவர்களது இருப்பிடம்’ எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். பாடம்: 1 ‘‘சூரியனும் (நமது வல்லமையைப் பறைசாற்றும் பிறிதொரு சான் றாகும்). அது, தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்” எனும் (36:38ஆவது) இறைவசனம்.
4802. அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார்.
சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா, அபூ தர்ரே?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்’ என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறைவனின் அரியாசனத்திற்கு)க் கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கிறது. இதைத்தான், ‘சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனம் குறிக்கிறது’ என்று கூறினார்கள்.
Book : 65