🔗

புகாரி: 4942

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، وَذَكَرَ النَّاقَةَ وَالَّذِي عَقَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” {إِذِ انْبَعَثَ أَشْقَاهَا} [الشمس: 12] انْبَعَثَ لَهَا رَجُلٌ عَزِيزٌ عَارِمٌ، مَنِيعٌ فِي رَهْطِهِ، مِثْلُ أَبِي زَمْعَةَ ”
وَذَكَرَ النِّسَاءَ، فَقَالَ: «يَعْمِدُ أَحَدُكُمْ، فَيَجْلِدُ امْرَأَتَهُ جَلْدَ العَبْدِ، فَلَعَلَّهُ يُضَاجِعُهَا مِنْ آخِرِ يَوْمِهِ»
ثُمَّ وَعَظَهُمْ فِي ضَحِكِهِمْ مِنَ الضَّرْطَةِ، وَقَالَ: «لِمَ يَضْحَكُ أَحَدُكُمْ مِمَّا يَفْعَلُ»

وَقَالَ أَبُو مُعَاوِيَةَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ أَبِي زَمْعَةَ عَمِّ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ


அத்தியாயம்: 88.

‘அல்ஃகாஷியா’

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(88:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமிலத்துந் நாஸிபா’ (அந்நாளில் சில முகங்கள் கடுமையான சிரமத்தை மேற்கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்) எனும் சொற்றொடர், கிறித்தவர்களையே குறிக்கின்றது.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(88:5 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அய்னின் ஆனியா’ (கொதிக்கும் நீரூற்று) எனும் சொல், அதன் கொதிநிலை உச்சகட்டத்தை அடைந்து, அதைக் குடிக்கும் தருணம் நெருங்கிவிட்ட நிலையிலுள்ள நீரைக் குறிக்கும். (இதைப் போன்றே,) 55:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹமீமின் ஆன்’ எனும் சொல்லுக்கும் ‘கொதிநிலையின் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்ட நீர்’ என்றே பொருள்.

(88:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாஃகியா’ (வீண் வார்த்தை ) எனும் சொல்லுக்கு ‘ஏச்சு’ என்பது பொருள்.

(88:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ளரீஉ’ எனும் சொல்லுக்கு ‘அஷ்ஷிப்ரிக்’ எனப்படும் ஒரு செடி என்று பொருள். இதை ஹிஜாஸ்வாசிகள் ‘அள்ளரீஉ’ என்று பெயரிட்டழைக்கின்றனர்; காய்ந்துவிட்டால் இதுவே நஞ்சாகும்.

(88:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி முசைத்திர்’ எனும் சொல்லுக்கு ‘நிர்ப்பந்திப்பவர்’ என்பது பொருள். (இது ‘ஸாத்’ உடனும் ‘சீன்’ உடனும்) ‘முஸைத்திர்’ என்றும் ‘முசைத்திர்’ என்றும் (இரு விதமாக) ஓதப்படுகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(88:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இயாபஹும்’ எனும் சொல்லுக்கு ‘(மரணத்துக்குப்பின்) அவர்கள் திரும்புவது’ என்று பொருள்.


அத்தியாயம்: 89.

‘அல்ஃபஜ்ர்’

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வித்ர்’ (ஒற்றை) எனும் சொல், அல்லாஹ்வைக் குறிக்கிறது. (

89:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இரம ஃதாத்தில் இமாத்’ எனும் சொல், பண்டைய கால மக்களான ‘ஆத்’ கூட்டத்தாரைக் குறிக்கிறது. ‘அல்இமாத்’ எனும் சொல், (எந்த ஊரிலும் நிலையாகத் தங்காத) கூடாரவாசி(களான நாடோடி)களைக் குறிக்கும். (‘உயரமான தூண்களை உடையவர்கள்’ என்றும் இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், (ஆத் கூட்டத்தாரான) அவர்கள் எதன் மூலம் தண்டிக்கப்பட்டனரோ அந்தச் சோதனையைக் குறிக்கும்.

(89:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்லல் லம்மா’ எனும் சொல்லுக்கு ‘சுருட்டி விழுங்குகின்றீர்கள்’ என்பது பொருள்.

(89:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜம்மா’ எனும் சொல்லுக்கு ‘அளவு கடந்து’ என்று பொருள்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், (89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஷ்ஷஃப்இ வல்வத்ர்’ என்பதன் விளக்கவுரையில், ‘‘இறைவன் படைத்த எல்லாப் பொருள்களும் இரட்டையாகும். (பூமியுடன்) வானமும் இரட்டைதான்; உயர்வான அல்லாஹ் ஒருவனே ஒற்றை” என்று கூறினார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், எல்லா விதமான வேதனைகளைக் குறிப்பதற்காகவும் அரபியர் பயன்படுத்தும் சொல்லாகும். இதில் சாட்டையும் அடங்கும்.

(89:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லபில் மிர்ஸாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவனிடம்தான் (அனைவரது) மீட்சியும் உள்ளது’ என்பது பொருள்.

(89:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தஹாள்ளூன்’ எனும் சொல்லுக்கு, ‘ஏழைக(ளின் உரிமைக)ளைப் பேணுவதில்லை’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ‘லா தஹுள்ளூன்’ எனும் சொல்லுக்கு ‘(ஏழைகளுக்கு) உணவளிக்குமாறு தூண்டுவதில்லை’ என்று பொருள்.

(89:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முத்மயின்னா’ எனும் சொல்லுக்கு ‘(அல்லாஹ் வழங்கும்) பிரதிபலனை நம்பக்கூடியது’ என்று பொருள்.


ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘யா அய்யத்துஹந் நஃப்சுல் முத்மயின்னா’ (அமைதியடைந்த ஆத்மாவே) எனும் இவ்வசனத்தின் கருத்தாவது: (இறைவன்) இந்த ஆத்மாவைக் கைப்பற்றும்போது அது இறைவனைக் குறித்து நிம்மதி கொள்கிறது. இறைவனும் அதைக் குறித்து நிம்மதி கொள்கிறான். அது இறைவனைக் குறித்து திருப்தியடைகிறது. இறைவனும் அதைக் குறித்து திருப்தி அடைகிறான். ஆகவே, அந்த ஆத்மாவைக் கைப்பற்ற உத்தரவிட்டு, அதைச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறான். மேலும், அதைத் தன்னுடைய (நல்ல) அடியார்களுடன் சேர்க்கவும் செய்கிறான்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாபூ’ எனும் சொல்லுக்கு ‘குடைந்(து வசித்துக்கொண்டிருந்)தனர்’ என்பது பொருள். இச்சொல் ‘ஜீபல் கமீஸு’ (தைப்பதற்காகச் சட்டை வெட்டப்பட்டது) எனும் சொல்லிலிருந்து பிறந்தது. (இதன் எதிர்கால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) ‘யஜூபுல் ஃபலாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவன் காடுகளை வெட்டுவான்’ என்று பொருள்.

(89:19 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மு’ (சுருட்டி விழுங்குதல்) எனும் சொல்(லின் இறந்த கால வினைச்சொல்) இடம்பெற்றுள்ள ‘லமம்த்துஹு அஜ்மஅ’ எனும் வாக்கியத்திற்கு, ‘அதன் இறுதிவரை வந்துவிட்டேன் (ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காலியாக்கிவிட்டேன்)’ என்பது பொருள்.


அத்தியாயம்: 90.

‘அல்பலத்’

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹாஃதல் பலத்’ (இந்த நகரம்) எனும் சொல், மக்காவையே குறிக்கின்றது.

(90:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘வ அன்த்த ஹில்லுன்- நீர் அனுமதிக்கப்பட்டுள்ளீர்’ என்பதற்கு) ‘(இறைவனின் ஆணைப்படி இந்நகரில் போர் புரிவதில்) மற்ற மக்களின் மீதுள்ள குற்றம் உமக்கில்லை’ என்று பொருள்.

(90:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ வாலித்’ (பெற்றோர்மீதும்) எனும் சொல், (மனித குலத்தின் தந்தையான) ஆதம் (அலை) அவர்களைக் குறிக்கின்றது.

(90:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுபத்’ எனும் சொல்லுக்கு ‘ஏராளமானது’ என்பது பொருள்.

(90:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வந்நஜ்தைனி’ (இரு வழிகள்) எனும் சொல், நன்மை மற்றும் தீமையைக் குறிக்கின்றது.

(90:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்ஃகபா’ எனும் சொல்லுக்கு ‘பசி’ என்பது பொருள்.

(90:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்ரபா’ எனும் சொல்லுக்கு ‘மண்ணில் விழுந்து கிடப்பவன்’ என்பது பொருள்.

(90:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்த்தஹமல் அகபத்த’ எனும் வாக்கியத்திற்கு ‘இந்த உலகில் அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை’ என்பது பொருள். பிறகு ‘அகபா’ என்றால் என்னவென்று இறைவன் விவரிக்கின்றான்: ‘‘ ‘அகபா’ என்ன என்று நீர் அறிவீரா? அதுதான், ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது உறவினர்களில் பசித்த ஓர் அநாதைக்கோ, அல்லது மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கோ பசித்திருக்கும் ஒரு நாளில் ஆகாரமளிப்பதாகும்”

(90:12-16). (90:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கபத்’ எனும் சொல்லுக்கு ‘கஷ்டம்’ என்பது பொருள்.


அத்தியாயம்:91.

‘அஷ்ஷம்ஸ்’

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(91:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளுஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் ஒளி’ என்பது பொருள்.

(91:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா தலாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதைத் தொடர்ந்து வரும்போது’ என்று பொருள்.

(91:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வமா தஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதை விரித்தவன்மீதும் சத்தியமாக!’ என்று பொருள்.

(91:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸ்ஸாஹா’ (புதைத்துவிட்டான்) எனும் சொல்லுக்கு ‘பாவத்தில் செலுத்தினான்’ என்பது பொருள்.

(91:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப அல்ஹமஹா’ (அதற்கு உணர்த்தினான்)எனும் சொல்லுக்கு ‘பாவம் புண்ணியத்தை அதற்கு அறிவித்தான்’ என்று பொருள்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(91:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி தஃக்வாஹா’ எனும் சொல்லுக்கு ‘தங்களுடைய பாவங்களின் காரணத்தால்’ என்று பொருள்.

(91:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வலா யகாஃபு உக்பாஹா’ எனும் வாக்கியத்திற்கு ‘யாரும் (தன்னைப்) பழிவாங்கிவிடுவார்களென்று இறைவன் பயப்படவில்லை’ என்று பொருள்.


4942. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை நான் செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘‘(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவுகூர்ந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களிலுள்ள நற்பேறற்ற ஒருவன் முன்வந்தபோது…” எனும் (91:12) ஆவது இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘‘அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்பு மிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்திற்காக (அதாவது அதைக் கொல்வதற்காக) முன்வந்தான்” என்று சொன்னார்கள்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்க(ளின் உரிமைக)ள் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பதுபோல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காகப்) படுக்க நேரலாம். (இது முறையா?).

பிறகு (உடலிலிருந்து பிரியும் துர்)வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, ‘‘(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) ‘உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?” என்று கேட்டபடி அறிவுரை கூறினார்கள்.


மற்றோர் அறிவிப்பில், ‘‘(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் பின் அல்அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூஸம்ஆவைப் போல (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 65