«أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حَمَلَ قُثَمَ بَيْنَ يَدَيْهِ، وَالفَضْلَ خَلْفَهُ، أَوْ قُثَمَ خَلْفَهُ، وَالفَضْلَ بَيْنَ يَدَيْهِ. فَأَيُّهُمْ شَرٌّ أَوْ أَيُّهُمْ خَيْرٌ؟»
பாடம் : 100
வாகனப் பிராணியின் உரிமையாளர் பிறரைத் தமக்கு முன்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொள்வது.
(அறிஞர்களில்) சிலர் கூறினர்: வாகனத்தின் உரிமையாளரே அதன் முற்பகுதியில் அமர அதிக உரிமையுடையவர் ஆவார்; அவர் தம்முடன் அமர்பவருக்கு முற்பகுதியில் உட்கார அனுமதியளித்தால் அவர் உட்காரலாம்.
5966. அய்யூப் (ரஹ்) அறிவித்தார்:
இக்ரிமா (ரஹ்) முன்னிலையில், ‘(வாகனப் பிராணியின் மீது மூவர் அமர்ந்து செல்லக்கூடாது; அவ்வாறு அமர்ந்து செல்லும்) அந்த மூவரில் தீயவர் யார்?’ என்பது குறித்துப் பேசப்பட்டது. அப்போது இக்ரிமா (ரஹ்), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின்போது மக்காவுக்கு) வந்தார்கள்.
(அவர்களை வரவேற்ற சிறுவர்களில் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களான) ‘குஸம் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ அல்லது ‘ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்கு முன்னாலும், குஸம் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னாலும்’ நபி (ஸல்) அவர்கள் (வாகனத்தில்) ஏற்றினார்கள்”. என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். இந்த மூவரில் (நபி, குஸம், ஃபள்ல்) ‘யார் தீயவர்?’ அல்லது ‘யார் நல்லவர்?’ என்று கூறமுடியுமா?’ என்று கேட்டார்கள்.
Book : 77