إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي القُعَيْسِ اسْتَأْذَنَ عَلَيَّ بَعْدَ مَا نَزَلَ الحِجَابُ، فَقُلْتُ: وَاللَّهِ لاَ آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ أَخَا أَبِي القُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي القُعَيْسِ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ؟ قَالَ: «ائْذَنِي لَهُ، فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِينُكِ» قَالَ عُرْوَةُ: فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ، تَقُولُ: «حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»
பாடம் : 93 ‘உன் வலது கை மண்ணைக் கவ்வட்டும்’, ‘அல்லாஹ் (அவளது கழுத்தை) அறுக்கட்டும்’, ‘அவளுக்குத் தொண்டை வலி வரட்டும்’ ஆகிய வார்த்தைகளை நபி (ஸல்) அவர்கள் (செல்லமாகப்) பயன்படுத்தியது.174
6156. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்ற பிறகு, என் வீட்டினுள் வர அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ்(ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். அப்போது நான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கும் வரை( உள்ளே வர) அனுமதிக்க மாட்டேன். ஏனெனில், அபுல் குஜஸின் சகோதரர் (அஃப்லஹ்) எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, அபுல்குஜஸ் அவர்களின் மனைவியே எனக்குப் பாலூட்டினார்’ என்றேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இந்த மனிதர் எனக்குப் பாலுட்டியவர் அல்லர். மாறாக, இவருடைய (சகோதரரின்) மனைவியே எனக்குப் பாலூட்டினார்’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடு! ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்’ என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதனால்தான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்கள், ‘இரத்த உறவினால் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கத் தடை செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 78