🔗

புகாரி: 6951

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«المُسْلِمُ أَخُو المُسْلِمِ، لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ»


பாடம் : 7

தம் நண்பருக்கு உயிர்ச் சேதமோ உடல் சேதமோ ஏற்படுமென ஒருவர் அஞ்சும் போது இவர் என் சகோதரர்தாம்’ என்று சத்தியம் செய்(து காப்பாற்று)வது.

அவ்வாறே நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொருவரும் அஞ்சும் போது காப்பாற்றலாம். ஏனெனில், ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிமை அக்கிரமக்காரனைவிட்டுக் காப்பதும், அவனுக்காகப் போராடுவதும், (தக்க சமயத்தில் காலை வாரிவிடுவதன் மூலம்) அவனுக்குத் துரோகம் இழைக்காமலிருப்பதும் அவசியமாகும்.15

அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவனைக் காப்பதற்காக ஒருவர் போராடி(யதில் அக்கிரமக்காரன் கொல்லப் படுவானா)னால் அவர் மீது பழிவாங்கல் தண்டனை கிடையாது.16

ஒரு முஸ்லிமிடம், நீ இந்த மதுவை அருந்த வேண்டும்; அல்லது இந்த செத்தப் பிராணியின் மாமிசத்தை நீ புசிக்கவேண்டும்; அல்லது உன்னுடைய அடிமையை நீ விற்க வேண்டும்; அல்லது (இன்னாருக்கு) நீ கடன் கொடுக்க வேண்டியுள்ளது என ஒப்புக்கொள்ள வேண்டும்;. அல்லது (இன்னாருக்கு) நீ கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டும்; அல்லது நீ செய்த ஒப்பந்தம் ஒன்றை முறித்துக் கொண்டதாக அறிவிக்க வேண்டும். இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் இஸ்லாமியச் சகோதரனை நாங்கள் கொன்று விடுவோம் என்பன போன்ற மிரட்டல் விடப்பட்டால் மேற்சொன்னவற்றை அவர் செய்வது செல்லும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான் என்று கூறியுள்ளார்கள்.

ஒரு முஸ்லிமிடம், நீ இந்த மதுவை அருந்த வேண்டும்; அல்லது இந்த செத்த பிராணியின் மாமிசத்தை நீ புசிக்க வேண்டும். இல்லையேல், உன் மகனை அல்லது உன் தந்தையை அல்லது மணமுடிக்கத் தகாத (உன்) நெருங்கிய உறவினரை நாங்கள் கொலை செய்துவிடுவோம்’ என்று (அக்கிரமக்காரனால் மிரட்டிக்) கூறப்பட்டால் மேற்சொன்ன வற்றைச் செய்வதற்கு அவருக்கு அனுமதியில்லை. ஏனெனில்,இவர் நிர்ப்பந்தத்திற் குள்ளாக்கப்பட்டவர் அல்லர் என்று சிலர் கூறுகின்றனர். அதே சமயம், ஒருவரிடம் இந்த அடிமையை நீ விற்றுவிடு; அல்லது (இன்னாருக்கு) நீ கடன் தர வேண்டியுள்ள தென ஒப்புக்கொள்;அல்லது (இன்னாருக்கு) அன்பளிப்பு வழங்கு. இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் மகனை நாங்கள் கொன்றுவிடுவோம் என (அக்கிரமக்காரர் களால்) கூறப்பட்டால் (சொன்னபடி) அவ்வாறே செய்வது அவருக்கு அவசியமாகும் என்பது தான் அனுமானம். ஆயினும், உசித மரபுப்படி இந்த வியாபாரமும் அன்பளிப்பும் இதில் நடந்த எல்லா ஒப்பந்தங்களும் செல்லாமல் போய்விடும் என்றும் கூறுகிறார்கள்.

இதன்மூலம், முதலில் கூறிய தங்களது கருத்துக்குத் தாங்களே முரண்படு கிறார்கள்.17 அது மட்டுமன்றி, குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஆதாரமின்றி மணமுடிக்கத் தகாத இரத்த பந்த உறவினர்களுக்கும் இதர உறவினர்களுக்கும் இடையே வேறுபாடும் காட்டுகின்றனர்.18

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் துணைவியாரைப் பார்த்து (கொடுங்கோல் மன்னனுக்கு முன்னால்) இவள் என் சகோதரி என்று கூறினார்கள். இது (கொள்கைச் சகோதரி’ என்ற) மார்க்க அடிப்படையில் கூறப்பட்டதாகும்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சத்தியம் செய்யும்படி கூறுபவன் அக்கிரமக்காரனாயிருந்தால் சத்தியம் செய்தவரின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்; சத்தியம் செய்யும்படி கூறுபவன் அக்கிரமத்திற்குள்ளானவனாயிருந்தால் அப்போது சத்தியம் செய்யும்படி கூறியவனின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்.19

6951. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்: அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவுமாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.20

Book : 89