🔗

புகாரி: 713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ» فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، قَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ» فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ يَخُطَّانِ فِي الأَرْضِ، حَتَّى دَخَلَ المَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


பாடம்: 68

இமாமைப் பின்பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர்களிடம்) “நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

713. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகமானபோது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர்களால் மக்களுக்குக் கேட்கும் விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று சொன்னேன்.

அப்போது (மீண்டும்) “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். நான் (அருகில் இருந்த) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அபூபக்ர் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால் மக்களுக்குக் கேட்கும் விதமாக அவர்கள் ஓதமாட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று நபியவர்களிடம் சொல்லுங்கள்” என்றேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தான். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் பூமியில் இழுபட வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அமர்ந்தபடி தொழுதுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.


அத்தியாயம்: 10