أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»
757. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் முகமன் (ஸலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) சொல்லிவிட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘ஸலாம்’ சொன்னார்.
அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த்தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (குனிந்ததும் நிமிர்ந்துவிடாமல்) நன்கு நிலை கொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்த நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக!
பின்னர் ஸஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! இதையே (இதே வழிமுறையையே) உம்முடைய எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
அத்தியாயம்: 10