بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ إِذْ رَأَيْنَاهُ ضَحِكَ حَتَّى بَدَتْ ثَنَايَاهُ، فَقَالَ لَهُ عُمَرُ: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ قَالَ: ” رَجُلَانِ مِنْ أُمَّتِي جَثَيَا بَيْنَ يَدَيْ رَبِّ الْعِزَّةِ، فَقَالَ أَحَدُهُمَا: يَا رَبِّ خُذْ لِي مَظْلِمَتِي مِنْ أَخِي، فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلطَّالِبِ: فَكَيْفَ تَصْنَعُ بِأَخِيكِ وَلَمْ يَبْقَ مِنْ حَسَنَاتِهِ شَيْءٌ؟ قَالَ: يَا رَبِّ فَلْيَحْمِلْ مِنْ أَوْزَارِي ” قَالَ: وَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبُكَاءِ، ثُمَّ قَالَ: ” إِنَّ ذَاكَ الْيَوْمَ عَظِيمٌ يَحْتَاجُ النَّاسُ أَنْ يُحْمَلَ عَنْهُمْ مِنْ أَوْزَارِهِمْ، فَقَالَ اللَّهُ تَعَالَى لِلطَّالِبِ: ” ارْفَعْ بَصَرَكَ فَانْظُرْ فِي الْجِنَّانِ فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: يَا رَبِّ أَرَى مَدَائِنَ مِنْ ذَهَبٍ وَقُصُورًا مِنْ ذَهَبً مُكَلَّلَةً بِالُّلؤْلُؤِ لِأَيِّ نَبِيٍّ هَذَا أَوْ لِأَيِّ صِدِّيقٍ هَذَا أَوْ لِأَيِّ شَهِيدٍ هَذَا؟ قَالَ: هَذَا لِمَنْ أَعْطَى الثَّمَنَ، قَالَ: يَا رَبِّ وَمَنْ يَمْلِكُ ذَلِكَ؟ قَالَ: أَنْتَ تَمْلِكُهُ، قَالَ: بِمَاذَا؟ قَالَ: بِعَفْوِكَ عَنْ أَخِيكَ، قَالَ: يَا رَبِّ فَإِنِّي قَدْ عَفَوْتُ عَنْهُ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: فَخُذْ بِيَدِ أَخِيكَ فَأَدْخِلْهُ الْجَنَّةَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «اتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُصْلِحُ بَيْنَ الْمُسْلِمِينَ»
8718. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில் ஒரு தடவை) அமர்ந்திருக்கும்போது, அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரிப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைச் சிரிக்க வைத்தது எது?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள், கண்ணியம் மிக்க நம் இரட்சகனின் முன்னிலையில் மண்டியிட்டனர். அவ்விருவரில் ஒருவர், ‘என் இரட்சகனே! என் சகோதரனால் எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு ஈடுசெய்யும் உரிமையை எனக்கு கொடு!’ என்று கூறினார். அப்போது அல்லாஹ் அந்த உரிமையைக் கோரியவரிடம், ‘உன் சகோதரனிடமோ, அவனது நன்மைகளில் எதுவும் மீதமில்லை! நீ இப்போது என்ன செய்வாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘என் இரட்சகனே! அப்படியானால், என்மீதுள்ள பாவச் சுமைகளை அவன் சுமக்கட்டும்!’ என்று கூறினார்.”
(இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் கூறியபோது) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாக, அந்த நாள் மகத்தான நாள். தங்கள்மீதுள்ள பாவச் சுமைகளை யாரேனும் சுமந்துகொள்ள மாட்டார்களா என்று மக்கள் ஏங்கக்கூடிய நாள் அது!”
அப்போது அல்லாஹ், அந்த உரிமையைக் கோரியவரிடம், ‘உன் பார்வையை உயர்த்தி, சொர்க்கங்களைப் பார்!’ என்று கூறினான். அவர் தம் தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு, ‘என் இரட்சகனே! தங்கத்தினாலான நகரங்களையும், முத்துவால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாளிகைகளையும் நான் பார்க்கிறேன். இது எந்த நபிக்குரியது? அல்லது எந்த உண்மையாளருக்குரியது? அல்லது எந்த, இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவருக்குரியது?’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ், ‘இதற்கான விலையைக் கொடுத்தவருக்கு இது உரியது!’ என்று கூறினான். அதற்கு அவர், ‘என் இரட்சகனே! அதற்குச் சொந்தக்காரராக எவர் இருக்க முடியும்?’ என்று கேட்டார். அதற்கு அல்லாஹ், ‘நீயே அதற்குச் சொந்தக்காரர்!’ என்று கூறினான். ‘எதனால்?’ என்று அவர் கேட்டார். ‘நீ உன் சகோதரனை மன்னித்துவிடுவதின் மூலமாக!’ என்று அல்லாஹ் கூறினான். அதற்கு அவர், ‘என் இரட்சகனே! நிச்சயமாக நான் அவனை மன்னித்துவிட்டேன்!’ என்று கூறினார். உடனே அல்லாஹ், ‘உன் சகோதரனின் கையைப் பிடித்து, அவனை சுவர்க்கத்தில் நுழைய வை!’ என்று கூறினான்.
அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்களுக்கிடையில் உள்ள பிணக்குகளைச் சீர்செய்துகொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் முஸ்லிம்களுக்கிடையே நிச்சயமாகச் சமாதானத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள்.