«سَدِّدُوا وَقَارِبُوا، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»
பாடம்:
உளூவைப் பேணிவருபவருக்கு ஈமான் (இறைநம்பிக்கை) இருக்கிறது என்று குறிப்பிடுதல்.
1037. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள்.
உங்கள் நற்செயல்களில் மிகச் சிறந்தது தொழுகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:
இந்தச் சொல் வழக்கு – நாம் நமது நூல்களில் குறிப்பிட்டுள்ளது போல – அரபியர்கள் ஒரு பொருளின் ஒரு பகுதிக்கு, அந்த முழுப் பொருளின் பெயரையே சூட்டும் வழக்கமுடையவர்கள் என்பதின்படி உள்ளதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘முஃமினைத் தவிர வேறு எவரும் உளூவை வழக்கமாக்குவதில்லை’ என்று கூறியதன் மூலம், உளூவைப் பேணுபவருக்கு ‘முஃமின்’ (இறைநம்பிக்கையாளர்) எனும் பெயரையே சூட்டியுள்ளார்கள். உண்மையில் உளூ என்பது ஈமானின் ஒரு பகுதியாகும். அவ்வாறே, ஈமானின் ஒரு பகுதியைச் செய்பவருக்கு அந்த முழு ஈமானின் பெயரையே இங்கு வழங்கியுள்ளார்கள்.
இந்தச் செய்தியின் கருத்தில் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து ஸாலிம் பின் அபுல்ஜஃத் அவர்கள் அறிவிக்கும் செய்தி ‘முன்கதிஃ’ (எனும் அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி) ஆகும். எனவேதான் நாம் (இந்த நூலில்) அதனைத் தவிர்த்துவிட்டோம்.