🔗

இப்னு ஹிப்பான்: 3448

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ، رَمَضَانُ وَذُو الْحِجَّةِ»


பாடம்:

ஹதீஸ்கலையை ஆழமாகக் கற்காதவர்களுக்கு, ரமலான் மாதம் முப்பது நாட்களை விடக் குறையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய ஒரு செய்தியின் விபரம்:

3448. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்திக்கு இரண்டு கருத்துகள் உள்ளன.

முதலாவது கருத்து: மேகமூட்டம் அல்லது மூடுபனி காரணமாக, நமக்கும் பிறையைப் பார்ப்பதற்கும் இடையே தடை ஏற்பட்டு, நம்முடைய பார்வையின்படி (நாட்களின் எண்ணிக்கையில்) அந்த இரு மாதங்களும் குறைந்தாலும், உண்மையான கணக்கில் அவை குறைவதில்லை.

இரண்டாவது கருத்து: சிறப்பிலும் நன்மையிலும் அந்த இரு பெருநாட்களின் மாதங்களும் குறைவதில்லை. அதாவது, துல்ஹிஜ்ஜாவின் (முதல்) பத்து நாட்களும் சிறப்பில் ரமலான் மாதத்தைப் போன்றதே ஆகும் என்பதை நபி (ஸல்) குறிப்பிட நாடுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழி அமைகிறது:

“துல்ஹஜ் மாத (முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் தான். ஆனால் “தமது உயிரையும் பொருளையும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று கூறினார்கள். (புகாரி-969, அபூதாவூத்-2438)