مَنْ وَجَدَ سَعَةً لِأَنْ يُضَحِّيَ فَلَمْ يُضَحِّ فَلَا يَحْضُرْ مُصَلَّانَا
19012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய (ஈதுல் அள்ஹா) தொழும் இடத்தை நெருங்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இவ்வாறே இதனை அப்துல்லாஹ் பின் அய்யாஷ் அல்கித்பானீ என்பவரிடமிருந்து ஹைவா பின் ஷுரைஹ், யஹ்யா பின் ஸயீத் அல்அத்தார் ஆகியோரும் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
அபூஈஸா-திர்மிதீ இமாம் அவர்கள், இந்தச் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாக வந்திருப்பதே சரியானது’ என்று கூறியதாக எனக்குச் செய்தி கிடைத்தது.
திர்மிதீ அவர்கள் இதற்கு கூறும் காரணம்: அப்துர்ரஹ்மான் அல்அஃரஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜஅஃபர் பின் ரபீஆ அவர்களும் மற்றவர்களும் இந்தச் செய்தியை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். எனவே ஸைத் பின் ஹுபாப் அவர்களின் வழியாக நபியின் சொல்லாக வரும் இந்தச் செய்தி மஹ்ஃபூள் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி அல்ல.
பைஹகீ இமாம் கூறுகிறார்: அல்அஃரஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அபூஜஅஃபர் அவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.
அப்துல்லாஹ் பின் அய்யாஷ் அல்கித்பானீ என்பவரிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப் அவர்களும் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.