أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ ثَلَاثًا، وَمَسَحَ بِرَأْسِهِ وَقَالَ: ” الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ”. وَكَانَ يَمْسَحُ الْمَاقَيْنِ.
(தலைக்கு மஸ்ஹ் செய்ய எடுக்கும் நீரே இரு காதுகளுக்கும் போதுமானது என்ற கருத்தை தரும்) “இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்” என்ற செய்திகளில் பிரபலமான செய்தி:
312. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தமது முகத்தை மூன்று முறையும், கைகளை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு தமது தலையை (மஸஹ்) ஈரக்கையால் தடவினார்கள்.
மேலும் ‘இரண்டு காதுகளும் தலையைச் சேர்ந்தவைதான்’ என்று கூறினார்கள். (மஸஹ் செய்யும்போது) கண்களின் ஓரங்களையும் அவர்கள் மஸஹ் செய்பவர்களாக இருந்தார்கள்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி குறித்து இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன:
1 . ஒன்று, இதன் சில அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள்.
2 . மற்றொன்று, இது நபி (ஸல்) அவர்களின் சொல்லா என்பதில் சந்தேகம் உள்ளது.
இதன் உண்மைத் தன்மையை பார்த்தால் யஹ்யா பின் மயீன் அவர்கள், “ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் ஆசிரியரான ஸினான் பின் ரபீஆ என்பவர் பலமானவர் அல்ல” என்று கூறியுள்ளார்.
இப்னு அவ்ன் அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவர் பற்றிச் சொல்லப்பட்டபோது, “நிச்சயமாக ஷஹ்ர் என்பவரை (அறிஞர்கள்) கைவிட்டுவிட்டனர்” என்று அவர் கூறினார். ‘கைவிட்டுவிட்டனர்’ என்றால் அவரைப் பற்றி விமர்சித்துள்ளனர், மக்கள் அவரைப் பற்றி விமர்சித்துள்ளனர் என்று பொருள்.
இதே அறிவிப்பாளர் தொடரில் ஷுஅபா கூறியுள்ளார்:
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பவர் சிரியாவைச் சேர்ந்த ஒரு மனிதருடன் பயணம் செய்தபோது, அவருடைய பையைத் திருடிவிட்டார்.
ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பைத்துல் மாலில் (நிதியகம்) பொறுப்பாளராக இருந்தபோது, வெள்ளிக் காசுகள் இருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டார்” என்று யஹ்யா பின் அபூபுகைர் என்பவரின் தந்தை கூறினார். இது குறித்துக் கவிஞர் ஒருவர் பாடும்போது:
“ஷஹ்ர் ஒரு பையிற்காகத் தனது மார்க்கத்தையே விற்றுவிட்டார். ஷஹ்ரே! உமக்குப் பிறகு இனி யாரைத்தான் குர்ஆன் ஓதுபவர்கள் (மார்க்கப் பற்றுடையவர்கள்) என்று நம்புவது?” என்று பாடினார்.
தஃலஜ் பின் அஹ்மத் கூறுகிறார்: நான் மூஸா பின் ஹாரூன் அவர்களிடம் இந்தச் செய்திப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘இது ஒரு பொருட்டே அல்ல (இதை ஆதாரமாக ஏற்க முடியாது). ஏனெனில் இதில் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் இடம் பெற்றுள்ளார், அவர் பலவீனமானவர்’ என்று கூறினார்.
பைஹகீ ஆகிய நான் கூறுகிறேன்: மேலும் இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் சொல்லா என்பதிலும் சந்தேகம் உள்ளது. (பலமான அறிவிப்பாளர்தொடர்களில் பார்க்கும்போது இதை அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் இதை சந்தேகமாகவே அறிவித்துள்ளார்)