أَعْتَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ اللَّيَالِي بِصَلَاةِ الْعِشَاءِ، وَهِيَ الَّتِي تُدْعَى الْعَتَمَةَ، فَلَمْ يَخْرُجْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: نَامَ النِّسَاءُ وَالصِّبْيَانُ، فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِأَهْلِ الْمَسْجِدِ حِينَ خَرَجَ عَلَيْهِمْ: «مَا يَنْتَظِرُهَا أَحَدٌ مِنْ أَهْلِ الْأَرْضِ غَيْرُكُمْ»،
وَذَلِكَ قَبْلَ أَنْ يَفْشُوَ الْإِسْلَامُ فِي النَّاسِ
زَادَ حَرْمَلَةُ فِي رِوَايَتِهِ، قَالَ ابْنُ شِهَابٍ: وَذُكِرَ لِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَمَا كَانَ لَكُمْ أَنَّ تَنْزُرُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّلَاةِ، وَذَاكَ حِينَ صَاحَ عُمَرُ بْنُ الْخَطَّابِ
– وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَلَمْ يَذْكُرْ قَوْلَ الزُّهْرِيِّ، وَذُكِرَ لِي وَمَا بَعْدَهُ
பாடம்: 40
இஷாத் தொழுகையின் நேரமும், அதை(ச் சற்று)த் தாமதப்படுத்துவதும்.
1120. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரை தாமதப்படுத்தினார்கள்.
-இஷா நேரம்தான் “அல்அ(த்)தமா” (இருட்டு நேரம்) என (மக்களால்) அழைக்கப்பட்டு வந்தது-
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறிய பிறகே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டிலிருந்து) புறப்பட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர்களை நோக்கி, “(தற்போது) இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கவில்லை”என்று கூறினார்கள். இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.
முஸ்லிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழைத்தபோது “தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் இறுதியாகக் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம்: 5