🔗

முஸ்லிம்: 3366

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا حُضِرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي الْبَيْتِ رِجَالٌ فِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمَّ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَا تَضِلُّونَ بَعْدَهُ»، فَقَالَ عُمَرُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غَلَبَ عَلَيْهِ الْوَجَعُ، وَعِنْدَكُمُ الْقُرْآنُ حَسْبُنَا كِتَابُ اللهِ، فَاخْتَلَفَ أَهْلُ الْبَيْتِ، فَاخْتَصَمُوا فَمِنْهُمْ مَنْ يَقُولُ: قَرِّبُوا يَكْتُبْ لَكُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ، وَمِنْهُمْ مَنْ يَقُولُ مَا قَالَ عُمَرُ، فَلَمَّا أَكْثَرُوا اللَّغْوَ وَالِاخْتِلَافَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا»، قَالَ عُبَيْدُ اللهِ: فَكَانَ ابْنُ عَبَّاسٍ، يَقُولُ: «إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ أَنْ يَكْتُبَ لَهُمْ ذَلِكَ الْكِتَابَ مِنِ اخْتِلَافِهِمْ وَلَغَطِهِمْ»


3366. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இல்லத்தில் மக்கள் பலரும் இருக்க, அவர்களிடையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட அவர்கள், “வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (குறிப்பிட்ட அந்த விஷயங்களில்) ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (அவர்களுக்கு எந்த வேலையும் கொடுத்துத் தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு இறைவேதம் போதும்” என்று சொன்னார்கள்.

அப்போது வீட்டிலிருந்தோரிடையே கருத்து வேறுபாடு எழுந்து சச்சரவிட்டுக்கொண்டனர். அவர்களில் சிலர், “(அல்லாஹ்வின் தூதர் – ஸல்) அவர்(கள் கேட்ட எழுதுபொருளை அவர்)களிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். உங்களுக்கு அவர்கள் ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பின்னர் நீங்கள் ஒருபோதும் வழி தவறவேமாட்டீர்கள்” என்று கூறினர்.

வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் மக்கள் அதிகமாகக் கூச்சலிட்டுச் சச்சரவு செய்த போது, “(இங்கிருந்து) எழுந்து செல்லுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல் போனதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.

Book : 25