«لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»،
قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ»
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
தூய்மைப் பற்றிய நபிமொழிகள்.
பாடம்: 1
(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.
அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களில் இருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில் அறிவிப்பாளர் ஹன்னாத் பின் ஸரிய்யீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “தூய்மை மூலமே தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று உள்ளது.
அபூஈஸா (என்ற) திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகச் சரியானதும், அழகானதுமாகும்.
மேலும் ஆமிர் என்றும் ஸைத் என்றும் கூறப்படும் அபுல்மலீஹ் பின் உஸாமா (ரஹ்) அவர்களிடமிருந்து அவரின் தந்தை (உஸாமா பின் உமைர்-ரலி) வழியாகவும், அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.