«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَكَبَّرَ أَرْبَعًا»
பாடம்:
ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுவது பற்றி வந்துள்ளவை.
1022. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அபிசீனிய மன்னரான) நஜ்ஜாஷி அவர்களுக்கு (ஃகாயிப்) ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அப்போது (அல்லாஹு அக்பர் என்று) நான்கு தக்பீர்கள் கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி), ஜாபிர் (ரலி), யஸீத் பின் ஸாபித் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
இதில் இடம்பெறும் யஸீத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். இவர் ஸைதை விட மூத்தவர் ஆவார். இவர் பத்ர் போரில் கலந்து கொண்டவர். ஆனால் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொள்ளவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் பெரும்பாலோர் இந்தக் கருத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள், ஜனாஸா தொழுகையில் (அல்லாஹு அக்பர் என்று) நான்கு தக்பீர்கள் கூறுவதைச் சரியான முறையாகக் கருதுகிறார்கள். மேலும் இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), இப்னுல் முபாரக் (ரஹ்), இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.