كَانَ مَالِكُ بْنُ هُبَيْرَةَ، إِذَا صَلَّى عَلَى جَنَازَةٍ، فَتَقَالَّ النَّاسَ عَلَيْهَا، جَزَّأَهُمْ ثَلَاثَةَ أَجْزَاءٍ، ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ فَقَدْ أَوْجَبَ»
பாடம்:
ஜனாஸா தொழுகை மற்றும் இறந்தவருக்காக (அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்வது பற்றி வந்துள்ளவை.
1028. மர்ஸத் பின் அப்துல்லாஹ் அல்யஸனிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்கள், ஜனாஸா தொழுகைக்கு வந்தவர்கள் குறைவாக இருந்தால் அவர்களை மூன்று வரிசையாக பிரித்து நிற்க செய்வார்கள்.
பின்பு, “யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), உம்மு ஹபீபா (ரலி), அபூஹுரைரா (ரலி), நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்த ஹதீஸ் “ஹஸன்” தரத்தைச் சேர்ந்ததாகும். இவ்வாறே இதை பல அறிவிப்பாளர்கள் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.
இப்ராஹீம் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள், முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளார். ஆனால், அவர் மர்ஸத் (ரஹ்) அவர்களுக்கும், மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்களுக்கும் இடையே மற்றொரு நபரைச் சேர்த்து அறிவித்துள்ளார்.
என்றாலும் மற்றவர்கள் அறிவித்த (மேற்கண்ட) செய்தியே நமது பார்வையில் மிகவும் சரியானதாகும்.