«الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ»
பாடம்:
குழந்தை பிறந்து சத்தமிடாவிட்டால் அதற்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதை விட்டுவிடுவது பற்றி வந்துள்ளவை.
1032. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு குழந்தை பிறக்கும்போது சத்தம் எழுப்பவில்லை (அழுகவில்லை) என்றால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படாது; அது சொத்தில் வாரிசாகாது, மற்றவர்கள் அதற்கு வாரிசாக முடியாது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை, மக்கள் (அறிவிப்பாளர்கள்) குளறுபடியாக அறிவித்துள்ளனர். சிலர் இதனை அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.
அஷ்அஸ் பின் ஸவ்வார் போன்ற மற்றவர்கள் அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.
முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் அதாஉ பின் அபூரபாஹ் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். இவற்றில் ஜாபிர் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள இந்த அறிவிப்பே (நபியின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடர்களை விட) மிகவும் சரியானது.
சில அறிஞர்கள் மேற்கண்ட செய்தியை ஏற்றுக்கொண்டு, ‘பிறக்கும்போது சத்தம் எழுப்பாத-அழாத குழந்தைக்கு (அது இறந்துவிட்டால் ஜனாஸாத்) தொழுகை நடத்தக்கூடாது’ என்று கூறுகின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.