صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ عَلَى جَنَازَةِ رَجُلٍ، فَقَامَ حِيَالَ رَأْسِهِ، ثُمَّ جَاءُوا بِجَنَازَةِ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ، فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا، فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ، فَقَالَ لَهُ العَلَاءُ بْنُ زِيَادٍ: هَكَذَا رَأَيْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الجَنَازَةِ مُقَامَكَ مِنْهَا وَمِنَ الرَّجُلِ مُقَامَكَ مِنْهُ؟ قَالَ: «نَعَمْ». فَلَمَّا فَرَغَ قَالَ: احْفَظُوا
1034. ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷி குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். ‘அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள்.
‘நபி (ஸல்) அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?’ என்று அலா பின் ஸியாத் (ரஹ்) கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். தொழுகை முடிந்ததும் ‘இதைக் கவனத்தில் வையுங்கள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஃகாலிப் (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஸமுரா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளது.
மேற்கண்ட அனஸ் (ரலி) அவர்களின் வழியாக வந்துள்ள ஹதீஸ் “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியை இதைப் போன்றே பலர் ஹம்மாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.
வகீஉ (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸை ஹம்மாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் தவறாக, காலிப் (ரஹ்) —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் கூறியுள்ளார். ஆனால் இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார் என்பதே சரியாகும்.
இந்த ஹதீஸை அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துல்வாரிஸ் பின் ஸயீத் (ரஹ்) அவர்களும் மற்றவர்களும் ஹம்மாம் (ரஹ்) அவர்களின் அறிவிப்பைப் போலவே அறிவித்துள்ளனர்.
அபூ ஃகாலிப் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் எதுவென்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடுகொண்டுள்ளனர். சிலர் அவரது பெயர் ‘நாஃபிஉ’ என்றும், சிலர் ‘ராஃபிஉ’ என்றும் கூறுகின்றனர்.
அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) போன்ற சில அறிஞர்கள், இவரின் இயற்பெயர் ‘ராஃபிஉ’ என்றே கூறியுள்ளனர்.