🔗

திர்மிதி: 1423

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” رُفِعَ القَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَشِبَّ، وَعَنِ المَعْتُوهِ حَتَّى يَعْقِلَ “


அத்தியாயம்: 15

நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்துள்ள குற்றவியல் தண்டனைகள் பற்றிய பாடங்கள்.

பாடம்: 1.

யாருக்கு (இந்த வகை) தண்டனை இல்லை என்பது பற்றி வந்துள்ளவை.

1423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மூன்று நபர்களிடமிருந்து (செயல்களைப் பதிவு செய்யும்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டது (அவர்களுக்குக் குற்றம் எழுதப்படாது):

1 . உறங்குபவர் விழிக்கும் வரை,

2 . சிறுவன் பருவமடையும் வரை,

3 . புத்தி சுவாதீனமற்றவர் தெளிவுபெறும் வரை.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி) வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அலீ (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வேறு வகை அறிவிப்பாளர்தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலர் “சிறுவன் பருவமடையும் வரை” என்பதை வேறு வார்த்தையில் கூறியுள்ளனர்.

ஹஸன் அல்பஸரீ அவர்கள் அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவிமடுத்ததாக நமக்குத் தெரியவில்லை. இருப்பினும், இந்த ஹதீஸ் அதாஉ பின் ஸாஇப் —> அபூளப்யான் —> அலீ பின் அபீ தாலிப் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஃமஷ் அவர்கள், அபூளப்யான் —> இப்னு அப்பாஸ் (ரலி) —> அலீ (ரலி)  என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்கூஃபாக-அலீ (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளார்.

கல்வியாளர்களிடம் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்பாடு உள்ளது. அலீ (ரலி) அவர்களின் காலத்தில் ஹஸன் அல்பஸரீ அவர்கள் வாழ்ந்துள்ளார். எனவே அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவர் அலீ (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக செவிமடுத்ததை நாம் அறியவில்லை (அதாவது அவர் தனது அறிவிப்பில் நேரடியாக செவியுற்றேன் என்று கூறவில்லை).

அபூளப்யான் அவர்களின் இயற்பெயர் “ஹுஸைன் பின் ஜுன்தப்” ஆகும்.