«مَنْ شَرِبَ الخَمْرَ فَاجْلِدُوهُ، فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ»
பாடம்:
“மது அருந்தியவரை சாட்டையால் அடியுங்கள்; நான்காவது தடவை திரும்ப அருந்தினால் அவரைக் கொன்று விடுங்கள்” என்பது குறித்து வந்துள்ளவை.
1444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் மது அருந்துகிறாரோ அவரை நீங்கள் சாட்டையால் அடியுங்கள். அவர் நான்காவது தடவையும் அருந்தினால் அவரைக் கொன்றுவிடுங்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), ஷரீத் (ரலி), ஷுரஹ் பின் அவ்ஸ் (ரலி), ஜரீர் (ரலி), அபுர்ரமத் அல்பலவீ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
முஆவியா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஆஸிம் —> அபூஸாலிஹ் —> முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இப்னு ஜுரைஜ், மஃமர் ஆகிய இருவரும் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
இந்த ஹதீஸ் குறித்து முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அபூஸாலிஹ் அவர்கள் முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் ஹதீஸ், அபூஸாலிஹ் அவர்கள் அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் ஹதீஸை விட மிகச் சரியானதாகும். மேலும் இவ்வாறு மது அருந்தியவரை (கொலை செய்யும்) சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு விட்டது.
இந்தக் கருத்தை முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள், முஹம்மது பின் முன்கதிர் —> ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் (பின்வருமாறு) அறிவித்துள்ளார்:
யார் மது அருந்துகிறாரோ அவரை நீங்கள் சாட்டையால் அடியுங்கள். அவர் நான்காவது தடவையும் அருந்தினால் அவரைக் கொன்றுவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு, நான்காவது தடவையாக மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அடித்தார்கள்; அவரைக் கொல்லவில்லை.
இதே கருத்தை ஸுஹ்ரீ அவர்கள் கபீஸா பின் துஐப் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
எனவே புகாரி இமாம் கூறினார்: ஆகவே, கொலை செய்யும் சட்டம் நீக்கப்பட்டு எளிதாக்கப்பட்டது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது மாற்றப்பட்டது என்ற கருத்திலேயே அதிகமான அறிஞர்கள் உள்ளனர். இது குறித்து ஆரம்ப காலத்திலும், தற்போதும் கூட அவர்களுக்கு மத்தியில் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாக நாம் அறியவில்லை.
மேலும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ள ஒரு செய்தி இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. அது என்னவெனில்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்’ என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:)
1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமானவன் விபசாரம் செய்வது.
3. ‘ஜமாஅத்’ எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது. (முழுமையான சரியான செய்தி காண்க: புகாரி-4610)