كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا، مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ حِمَارًا عَلَى فَرَسٍ»
பாடம்:
(இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடுவது வெறுப்புக்குரியது என்பது பற்றி வந்துள்ளவை.
1701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வால்) கட்டளையிடப்படும் ஓர் அடியாராக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மற்ற) மக்களுக்கு சொல்லாமல் எங்களுக்காக மட்டும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் மூன்று விஷயங்களைத் தவிர. (அதை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள்.)
அவைகள்:
1 . நாங்கள் உளூ எனும் அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
2 . தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
3 . (இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடக் கூடாது என்று தடுத்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, அலீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
மேற்கண்ட செய்தி ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், அபூஜஹ்ளம் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இதைப் பற்றி, புகாரீ இமாம் அவர்கள் கூறியதாவது:
ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் அறிவிக்கும் (அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள) செய்தி முன்னுரிமை பெற்ற செய்தியல்ல. ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் இதை தவறாக அறிவித்துள்ளார்.
இஸ்மாயீல் பின் உலைய்யா, அப்துல்வாரிஸ் பின் ஸயீத் ஆகியோர் அறிவிக்கும், அபூஜஹ்ளம் —> அப்துல்லாஹ் பின் உபைதுல்லாஹ் பின் அப்பாஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும்.