🔗

திர்மிதி: 182

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«صَلَاةُ الوُسْطَى صَلَاةُ العَصْرِ»


182. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூஹாஷிம் பின் உத்பா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் கூறினார்:

ஹஸன் பஸரீ, ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் சரியானதே. ஏனெனில் ஹஸன் பஸரீ ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக ஹதீஸை செவியுற்றுள்ளார் என்று அலீ பின் அப்துல்லாஹ் (இப்னுல் மதீனீ) அவர்கள் கூறினார்.


“நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகையாகும்” என்ற மேற்கண்ட ஸமுரா (ரலி) அவர்களின் ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

நபித்தோழர்கள் மற்றும் பிற அறிஞர்களில் அதிகமானோர், இந்த ஹதீஸின் படி “நடுத்தொழுகை அஸர் தொழுகையே” என்ற கருத்தில் உள்ளனர்.

ஆனால், ஸைத் பின் ஸாபித் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது லுஹர் தொழுகை” என்று கூறுகின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் “நடுத்தொழுகை என்பது ஃபஜ்ர் தொழுகை” என்று கூறுகின்றனர்.


ஹபீப் பின் ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் முஹம்மத் பின் ஸீரீன் அவர்கள், “அகீகா (குழந்தை பிறக்கும் போது ஆடு அறுப்பது) குறித்த ஹதீஸை ஹஸன் பஸரீ அவர்கள் யாரிடமிருந்து செவியுற்றார்? என்று அவரிடம் கேளும்” என்று சொன்னார். நான் ஹஸன் அவர்களிடம் கேட்டபோது அதற்கவர், “நான் அதை ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று பதிலளித்தார்.

இந்தத் தகவலை முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள், அலீ பின் அப்துல்லாஹ் —> குறைஷ் பின் அனஸ் —> ஹபீப் பின் ஷஹீத் —> முஹம்மத் பின் ஸீரீன் என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.

எனவே தான் அலீ பின் அப்துல்லாஹ் (இப்னுல் மதீனீ) அவர்கள் ஹஸன் பஸரீ, ஸமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் சரியானதே என்பதற்கு (அகீகா பற்றிய) இந்த ஹதீஸை ஆதாரமாக கூறுவார் என முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் கூறினார்.