قَالَ: أَخَذَ زِيَادُ بْنُ أَبِي الجَعْدِ بِيَدِي وَنَحْنُ بِالرَّقَّةِ، فَقَامَ بِي عَلَى شَيْخٍ يُقَالُ لَهُ: وَابِصَةُ بْنُ مَعْبَدٍ، مِنْ بَنِي أَسَدٍ، فَقَالَ زِيَادٌ: حَدَّثَنِي هَذَا الشَّيْخُ «أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ – وَالشَّيْخُ يَسْمَعُ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»
230. ஹிலால் பின் யஸாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸியாத் பின் அபுல்ஜஃத் (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்து ரக்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிற்கவைத்தார். அவரின் பெயர் வாபிஸா பின் மஅபத் (ரலி) ஆகும்.
அப்போது ஸியாத் அவர்கள், “(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்” என்று இந்த பெரியவர் தான் எனக்குக் கூறினார்கள்’ என்று சொன்னார். இதை அந்தப் பெரியவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ பின் ஷைபான் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
வாபிஸா (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தைச் சேர்ந்ததாகும்.
அறிஞர்களில் ஒரு சாரார், ஒரு மனிதர் தொழுகையின் வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுவதை வெறுக்கத்தக்கதாகக் கருதியுள்ளனர். வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுதால் அவர் அத்தொழுகையை மீண்டும் தொழ வேண்டும் என்று கூறியுள்ளனர். அஹ்மத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இக்கருத்தையே கூறியுள்ளனர்.
மற்றொரு சாரார், தொழுகையின் வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுதாலும் அது கூடும். செல்லுபடியாகும் என்று கூறியுள்ளனர். இது ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாஃபியீ ஆகியோரின் கருத்தாகும்.
கூஃபா நகர அறிஞர்களில் ஒரு சாராரும் வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, தொழுகையின் வரிசைக்கு பின்னால் தனியாகத் தொழுபவர் தொழுகையை மீண்டும் தொழ வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்களில் ஹம்மாத் பின் அபூஸுலைமான், இப்னு அபூலைலா, வகீஃ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை (மேற்கண்ட அபுல்அஹ்வஸ் அவர்களைப் போன்றே) ஜியாத் பின் அபுஜஃத் அவர்களிடமிருந்து வாபிஸா (ரலி) அவர்களின் ஹதீஸை பலரும் அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஹுஸைன் அவர்களின் அறிவிப்பில் ஹிலால் பின் யஸாஃப் அவர்கள் வாபிஸா (ரலி) அவர்களைச் சந்தித்துள்ளார் என்பதற்கான சான்றும் உள்ளது.
(பலதரப்பட்ட இந்த அறிவிப்பாளர்தொடர்களினால்) ஹதீஸ்கலை அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது:
சிலர், அம்ர் பின் முர்ரா —> ஹிலால் பின் யஸாஃப் —> அம்ர் பின் ராஷித் —> வாபிஸா பின் மஅபத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியே மிகவும் சரியானது என்று கூறுகின்றனர்.
வேறுசிலர், ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் —> ஹிலால் பின் யஸாஃப் —> ஸியாத் பின் அபுல்ஜஃத் —> வாபிஸா பின் மஅபத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியே மிகவும் சரியானது என்று கூறுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை ஹுஸைன் அவர்களின் இந்த அறிவிப்பே அம்ர் பின் முர்ரா அவர்களின் அறிவிப்பை விட மிகச் சரியானது. ஏனெனில், ஹிலால் பின் யஸாஃப் அவர்களின் இந்தச் செய்தி மற்றவர்கள் மூலமாகவும் ஸியாத் பின் அபுல்ஜஃத் —> வாபிஸா பின் மஅபத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.