🔗

திர்மிதி: 235

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«يَؤُمُّ القَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ، فَإِنْ كَانُوا فِي القِرَاءَةِ سَوَاءً، فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً، فَأَقْدَمُهُمْ هِجْرَةً، فَإِنْ كَانُوا فِي الهِجْرَةِ سَوَاءً، فَأَكْبَرُهُمْ سِنًّا، وَلَا يُؤَمُّ الرَّجُلُ فِي سُلْطَانِهِ، وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ»،

قَالَ مَحْمُودٌ: قَالَ ابْنُ نُمَيْرٍ فِي حَدِيثِهِ: «أَقْدَمُهُمْ سِنًّا»،


பாடம்:

தொழுகை நடத்துவதற்கு அதிகம் தகுதியானவர் யார்?

235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்).

ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.

இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இப்னு நுமைர் அவர்கள், (முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் என்பதற்கு பதிலாக) “அவர்களில் வயதில் மூத்தவர்” எனும் வாசகத்தை அறிவித்ததாக மஹ்மூத் பின் ஃகைலான் அவர்கள் கூறினார்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஸயீத் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி), மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி), அம்ர் இப்னு ஸலமா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

அபூமஸ்ஊத் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.

மக்களில் இமாமத்திற்கு அதிகம் தகுதியானவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை நன்கு ஓதக்கூடியவர்களும், நபிவழியை அதிகம் அறிந்தவர்களும் தான் என்று இதன்படியே மார்க்க அறிஞர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஒரு வீட்டிற்கு அதன் உரிமையாளரே இமாமத் செய்ய அதிகம் தகுதியானவர் என்றும் இவர்கள் கூறுகின்றனர். வேறு சிலர், “வீட்டு உரிமையாளர் மற்றவருக்கு இமாமத் செய்ய அனுமதி அளித்தால், அவர் இமாமத் செய்வதில் தவறில்லை” என்று கூறுகின்றனர். வேறு சிலர் அதை விரும்பவில்லை. அவர்கள், “வீட்டு உரிமையாளரே இமாமத் செய்வதுதான் நபிவழி” என்று கூறுகின்றனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) கூறுகிறார்:

“ஒருவரது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட இடத்தில், அவர் இல்லாமல் வேறொருவர் இமாமத் செய்ய வேண்டாம். ஒருவரது வீட்டில், அவரது அனுமதியின்றி, அவரது இருக்கையில் மற்றவர் அமர வேண்டாம்” என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றின்படி, வீட்டு உரிமையாளர் அனுமதி அளித்தால், எல்லாவற்றுக்கும் அனுமதி அளித்ததாகவே நான் கருதுகிறேன்.

எனவே (இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால்) அஹ்மத் அவர்கள், “வீட்டு உரிமையாளர் அனுமதித்தால், மற்றவர் இமாமத் செய்வதில் தவறில்லை” என்று கருதுகிறார்.