🔗

திர்மிதி: 2682

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

قَدِمَ رَجُلٌ مِنَ المَدِينَةِ عَلَى أَبِي الدَّرْدَاءِ، وَهُوَ بِدِمَشْقَ فَقَالَ: مَا أَقْدَمَكَ يَا أَخِي؟ فَقَالَ: حَدِيثٌ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَمَا جِئْتَ لِحَاجَةٍ؟ قَالَ: لَا، قَالَ: أَمَا قَدِمْتَ لِتِجَارَةٍ؟ قَالَ: لَا، قَالَ: مَا جِئْتُ إِلَّا فِي طَلَبِ هَذَا الحَدِيثِ؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَبْتَغِي فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا إِلَى الجَنَّةِ،

وَإِنَّ المَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضَاءً لِطَالِبِ العِلْمِ،

وَإِنَّ العَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الحِيتَانُ فِي المَاءِ،

وَفَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ، كَفَضْلِ القَمَرِ عَلَى سَائِرِ الكَوَاكِبِ،

إِنَّ العُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ، إِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا العِلْمَ، فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ»


2682. கைஸ் பின் கஸீர் கூறியதாவது:

ஒரு மனிதர் மதீனாவிலிருந்து, திமிஷ்கி (டமாஸ்கஸி)லிருந்த அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்தார். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “சகோதரரே! நீங்கள் (என்னிடம்) வந்ததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு அவர், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஒரு நபிமொழியே இங்கு வரச்செய்தது” என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், வேறு எந்தத் தேவைக்காகவும் நீர் வரவில்லையா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள், “ஏதேனும் வணிக நோக்கத்துடன் நீர் வரவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார்.

அபுத்தர்தா (ரலி) அவர்கள் இந்த நபிமொழியைத் தேடித்தான் நீர் வந்தீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதையில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான்.

வானவர்கள் கல்வியைத் தேடும் (மாணவர்) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளை கீழே வைக்கின்றனர்.

கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன.

பக்தியாளரைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.

மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக்காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை. அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர். யார் இந்தக் கல்வியைப் பெற்றுக் கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த நபிமொழி, ஆஸிம் பின் ரஜாஉ பின் ஹய்வா என்பவர் வழியாகத் தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

மஹ்மூத் பின் கிதாஸ் எங்களுக்கு அறிவித்த (மேற்கண்ட) அறிவிப்பாளர்தொடர் என்னைப் பொறுத்தமட்டில், முத்தஸிலான (இடைமுறிவு ஏற்படாத) அறிவிப்பாளர்தொடர் அல்ல.

உண்மையில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் இந்த நபிமொழி, ஆஸிம் பின் ரஜாஉ பின் ஹய்வா —> தாவூத் பின் ஜமீல் (அல்வலீத் பின் ஜமீல்) —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே மேற்கண்ட மஹ்மூத் பின் கிதாஸ் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை விட மிகவும் உண்மையானதாகும். இதுதான் உண்மையான அறிவிப்பாளர்தொடர் என்பது முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரீ) அவர்களின் கருத்துமாகும்.