«مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لَا أَقُولُ الم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ»
பாடம்:
குர்ஆனிலுள்ள ஓர் எழுத்தை ஓதியவருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது தொடர்பாக வந்துள்ளவை.
2910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தைப் படிக்கிறாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கிறது. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். ‘‘அலிஃப் லாம் மீம்” என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். மாறாக. ‘அலிஃப்’ ஒரு எழுத்து ‘லாம்’ ஒரு எழுத்து, ‘மீம்’ ஒரு எழுத்து ஆகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்ததாகும்.
இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபுல்அஹ்வஸும் அறிவித்துள்ளார். இதைச் சிலர் நபியின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர். சிலர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.
இதில் வரும் அறிவிப்பாளர் முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள் குறித்து, குதைபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றுள்ளேன்:
முஹம்மது பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் பிறந்தார்கள்; அவருக்கு அபூஹம்ஸா என்ற குறிப்பு பெயர் கூறப்படுகிறது என்றத் தகவல் எனக்குக் கிடைத்தது.