🔗

திர்மிதி: 3

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் திறவுகோல் உளூ எனும் அங்கத் தூய்மையாகும். (தொழுகையில் இல்லாத ஏனைய செயல்களை) தடையாக ஆக்குவது (அல்லாஹு அக்பர் எனக் கூறும்) முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) அனுமதிப்பது, (தொழுகையை நிறைவு செய்ய கொடுக்கும்) ஸலாம் ஆகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பாக வந்துள்ள செய்திகளில் இதுவே மிகச் சரியானதும், அழகானதும் ஆகும்.

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அகீல் (ரஹ்) அவர்கள் ஸதூக்-நடுத்தரமானவர் எனும் தரத்தில் உள்ளவராவார். இவரின் நினைவாற்றல் குறித்து சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்), ஹுமைதீ (ரஹ்) ஆகிய அறிஞர்கள் இவரின் செய்தியை ஆதாரமாக ஏற்றுள்ளனர் என்று புகாரீ இமாம் அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். புகாரீ அவர்களும் இவரை முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் என்று கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.