” أَتَانِي رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ، فَقَالَ: يَا مُحَمَّدُ، قُلْتُ: لَبَّيْكَ رَبِّي وَسَعْدَيْكَ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: رَبِّ لَا أَدْرِي، فَوَضَعَ يَدَهُ بَيْنَ كَتِفَيَّ فَوَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ فَعَلِمْتُ مَا بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، فَقُلْتُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: فِي الدَّرَجَاتِ وَالكَفَّارَاتِ، وَفِي نَقْلِ الأَقْدَامِ إِلَى الجَمَاعَاتِ، وَإِسْبَاغِ الوُضُوءِ فِي المَكْرُوهَاتِ، وَانْتِظَارِ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ، وَمَنْ يُحَافِظْ عَلَيْهِنَّ عَاشَ بِخَيْرٍ وَمَاتَ بِخَيْرٍ، وَكَانَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ “
3234. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் இறைவன் மிக அழகான தோற்றத்தில் என்னிடம் வந்து ‘முஹம்மதே!’ என்று என்னை அழைத்தான். நான் ‘லப்பைக் ரப்பீ வ ஸஃதைக்’ (இறைவனே! உன் கட்டளைக்கு நான் மிகவும் கட்டுப்பட்டவன்) என்று கூறினேன்.
அவன் கூறினான்: ‘முஹம்மதே! (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் அறிவீரா?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது!’ என்று கூறினேன்.
அப்போது அவன் தன்னுடைய கையை என் இரு தோள்களுக்கு இடையில் வைத்தான். அதன் குளிர்ச்சியை என் மார்பில் நான் உணர்ந்தேன். அதன் பிறகு, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் உள்ள அனைத்தும் எனக்குத் தெரிந்தது.
பிறகு அவன் மீண்டும், ‘‘முஹம்மதே! என்று என்னை அழைத்தான். நான் ‘லப்பைக் ரப்பீ வ ஸஃதைக்’ (இறைவனே! உன் கட்டளைக்கு நான் மிகவும் கட்டுப்பட்டவன்) என்று கூறினேன். (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் (இப்போது) அறிவீரா?’ என்று அவன் கேட்டான்.
நான் ‘சொர்க்கத்தின் உயர் பதவிகளைப் பற்றியும், பாவங்களை அழிக்கும் செயல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்’ என்று கூறினேன்.
அந்த உயர் பதவிகளும், பாவங்களை அழிக்கும் செயல்களும்:
ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்லுதல்.
சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்தல்.
ஒரு தொழுகைக்குப் பிறகு அடுத்த தொழுகைக்காகக் காத்திருத்தல்.
யார் இவற்றைப் பேணி நடக்கிறாரோ, அவர் நல்ல முறையில் வாழ்வார். நல்ல முறையில் மரணிப்பார். மேலும், அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்தது போல பாவங்களிலிருந்து தூய்மையானவராக ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தி, இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
மேலும், இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழிகள், முஆத் பின் ஜபல் (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வழியாக, இந்தச் செய்தி முழுமையான-நீண்ட ஹதீஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக எனக்கு உறக்கம் வந்தது. நான் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். அப்போது என் இறைவனை மிக அழகான தோற்றத்தில் கண்டேன். அப்போது அவன், (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டான்” என்று கூறினார்கள்’ என தொடர்ந்து வந்துள்ளது.