احْتُبِسَ عَنَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ مِنْ صَلَاةِ الصُّبْحِ حَتَّى كِدْنَا نَتَرَاءَى عَيْنَ الشَّمْسِ، فَخَرَجَ سَرِيعًا فَثُوِّبَ بِالصَّلَاةِ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَجَوَّزَ فِي صَلَاتِهِ، فَلَمَّا سَلَّمَ دَعَا بِصَوْتِهِ فَقَالَ لَنَا: «عَلَى مَصَافِّكُمْ كَمَا أَنْتُمْ» ثُمَّ انْفَتَلَ إِلَيْنَا فَقَالَ: ” أَمَا إِنِّي سَأُحَدِّثُكُمْ مَا حَبَسَنِي عَنْكُمُ الغَدَاةَ: أَنِّي قُمْتُ مِنَ اللَّيْلِ فَتَوَضَّأْتُ فَصَلَّيْتُ مَا قُدِّرَ لِي فَنَعَسْتُ فِي صَلَاتِي فَاسْتَثْقَلْتُ، فَإِذَا أَنَا بِرَبِّي تَبَارَكَ وَتَعَالَى فِي أَحْسَنِ صُورَةٍ، فَقَالَ: يَا مُحَمَّدُ قُلْتُ: لَبَّيْكَ رَبِّ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: لَا أَدْرِي رَبِّ، قَالَهَا ثَلَاثًا ” قَالَ: ” فَرَأَيْتُهُ وَضَعَ كَفَّهُ بَيْنَ كَتِفَيَّ حَتَّى وَجَدْتُ بَرْدَ أَنَامِلِهِ بَيْنَ ثَدْيَيَّ، فَتَجَلَّى لِي كُلُّ شَيْءٍ وَعَرَفْتُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، قُلْتُ: لَبَّيْكَ رَبِّ، قَالَ: فِيمَ يَخْتَصِمُ المَلَأُ الأَعْلَى؟ قُلْتُ: فِي الكَفَّارَاتِ، قَالَ: مَا هُنَّ؟ قُلْتُ: مَشْيُ الأَقْدَامِ إِلَى الجَمَاعَاتِ، وَالجُلُوسُ فِي المَسَاجِدِ بَعْدَ الصَّلَوَاتِ، وَإِسْبَاغُ الوُضُوءِ فِي المَكْرُوهَاتِ، قَالَ: ثُمَّ فِيمَ؟ قُلْتُ: إِطْعَامُ الطَّعَامِ، وَلِينُ الكَلَامِ، وَالصَّلَاةُ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ. قَالَ: سَلْ. قُلْتُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الخَيْرَاتِ، وَتَرْكَ المُنْكَرَاتِ، وَحُبَّ المَسَاكِينِ، وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي، وَإِذَا أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ، وَأَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ “، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا حَقٌّ فَادْرُسُوهَا ثُمَّ تَعَلَّمُوهَا»
3235. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் சுபுஹ் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வர தாமதமாகிவிட்டது. சூரியன் கிட்டத்தட்ட உதயமாகும் நிலையை நாங்கள் அடைந்தோம். அப்போது, அவர்கள் விரைந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் விரைவாகத் தொழுது முடித்தார்கள். சலாம் கொடுத்தவுடன், சப்தமிட்டு எங்களிடம், “நீங்கள் உங்கள் வரிசைகளிலேயே அப்படியே இருங்கள்!” என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் திரும்பி, “இந்த காலையில் உங்களை விட்டும் நான் தாமதமானதற்கான காரணத்தை இப்போது நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நான் இரவில் எழுந்து உளூச் செய்து, எனக்குக் கடமையாக்கப்பட்ட அளவுக்கு தொழுதேன். அப்போது தொழுகையிலேயே எனக்கு உறக்கம் வந்து ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிவிட்டேன். நான் திடீரென்று (கனவில்) என்னுடைய ரப்பை மிக அழகான தோற்றத்தில் கண்டேன்.
அவன், ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். நான், ‘லப்பைக் ரப்பி!’ (உன் அழைப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன், என் இரட்சகனே!) என்று கூறினேன். அவன், ‘(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டான். நான், ‘எனக்குத் தெரியாது, என் ரப்பே!’ என்று மூன்று முறை கூறினேன்.
(தொடர்ந்து நபி (ஸல்) கூறினார்கள்): பிறகு, அவன் தன்னுடைய கையை என் இரு தோள்களுக்கிடையில் வைத்ததை நான் கண்டேன். அவனுடைய விரல் நுனிகளின் குளிர்ச்சியை என்னுடைய மார்பகங்களுக்கிடையில் நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு எல்லாம் தெளிவாகி, நான் அறிந்துகொண்டேன்.
அவன், ‘முஹம்மதே!’ என்று கூறினான். நான், ‘லப்பைக் ரப்பி!’ என்று கூறினேன். அவன், ‘(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டான். நான், ‘பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் காரியங்களைப் பற்றி!’ என்று கூறினேன். அவன், ‘அவை யாவை?’ என்று கேட்டான். நான், ‘ஜமாஅத் தொழுகைக்காக கால்களால் நடந்து செல்வதும், தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களில் அமர்ந்திருப்பதும், சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும் ஆகும்’ என்று கூறினேன்.
அவன், ‘பிறகு எதைப் பற்றி?’ என்று கேட்டான். நான், ‘உணவு அளிப்பதும், இன்முகத்துடன் பேசுவதும், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவில் தொழுவதும் ஆகும்’ என்று கூறினேன். அவன், ‘கேள்!’ என்று கூறினான்.
நான், ‘இறைவா! நான் உன்னிடம் நல்ல காரியங்களைச் செய்யவும், தீமைகளை விட்டு விலகவும், ஏழைகளை நேசிக்கவும், நீ என்னை மன்னிக்கவும், எனக்குக் கருணை காட்டவும் வேண்டுகிறேன். மேலும், ஒரு சமூகத்திற்கு நீ குழப்பத்தை நாடினால், குழப்பத்திற்கு ஆளாகாதவனாக என்னை மரணிக்கச் செய்வாயாக!
உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று கூறினேன். பின்னர், நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக இது உண்மை. ஆகவே, இதனைக் கற்றுக்கொள்ளுங்கள்; பிறகு அதன்படி செயல்படுங்கள்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
நான் முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் அவர்களிடம் இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது அவர், “இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் ஆகும்” என்று கூறினார்.
இது வலீத் பின் முஸ்லிம், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> காலித் பின் லஜ்லாஜ் —> அப்துர் ரஹ்மான் பின் ஆயிஷ் ஹள்ரமீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தியை விட மிகச் சரியானதாகும். இதில், அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன்” என்று கூறியதாக வலீத் பின் முஸ்லிம் அறிவித்துள்ளார். இது மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற ஹதீஸ் அல்ல.
பிஷ்ர் பின் பக்ர் அவர்கள் இதை, அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> காலித் பின் லஜ்லாஜ் —> அப்துர் ரஹ்மான் பின் ஆயிஷ் ஹள்ரமீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அப்துர் ரஹ்மான் பின் ஆயிஷ் அவர்கள் “நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்” என்று கூறியதாக (அதாவது ஸிமாஃவை) குறிப்பிடவில்லை. அன்அனாவாக அறிவித்துள்ளார். அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக எந்த ஹதீஸையும் செவியுற்றவர் அல்ல.