🔗

திர்மிதி: 3614

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا سَمِعْتُمُ المُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ، ثُمَّ صَلُّوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا لِيَ الوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، وَمَنْ سَأَلَ لِيَ الوَسِيلَةَ حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ»


3614. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்:

இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் என்பவர் குறைஷி கிளையைச் சேர்ந்தவர். மேலும் இவர் மிஸ்ர் (எனும் எகிப்து) நாட்டைச் சேர்ந்தவர்.

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் பின் நுஃபைர் என்ற மற்றொருவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.