«مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا، حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَإِنَّهُ كَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا، وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا، حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا»،
பாடம்:
(நஃபில் எனும்) கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுவது குறித்து வந்துள்ளவை.
373. நபி (ஸல்) அவர்களின் மனைவி(யரில் ஒருவரான) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஃபில் எனும்) கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழலானார்கள்.
அப்போது அவர்கள், ஒரு அத்தியாயத்தை (ஓதினால் அதை வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் சிறிய அத்தியாயத்தை ஓதினால்கூட) அது நீளமான அத்தியாயத்தை போன்று இருக்கும்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, உம்மு ஸலமா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
”நபி (ஸல்) அவர்கள் இரவில் உட்கார்ந்தபடியே (ஓதித்) தொழுவார்கள்; ஓதவேண்டிய முப்பது அல்லது நாற்பது வசனங்கள் அளவுக்கு எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள். பிறகு ருகூஉ செய்வார்கள். இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும் செய்வார்கள்” எனவும் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
“நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். அவர்கள் நின்ற நிலையில் ஓதித் தொழும்போது நின்ற நிலையிலிருந்தே ருகூஉவுக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதித் தொழும்போது உட்கார்ந்த நிலையிலிருந்தே ருகூஉக்கும் ஸஜ்தாவுக்கும் செல்வார்கள்” எனவும் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோர், இவ்விரு செய்திகளும் சரியானவை என்று கருதுவதால் இவ்விரண்டின்படியும் செயல்படலாம் என்று கூறுகின்றனர்.