«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ»
424. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களும், அதற்குப் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாக இருந்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பொடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அலி (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன்” தரத்தில் உள்ளதாகும்.
ஆஸிம் பின் ளம்ரா அவர்களின் ஹதீஸ் ஹாரிஸ் என்பவரின் ஹதீஸை விட சிறந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்று ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் அவர்கள் அறிவித்துள்ளார்.
நபித்தோழர்கள், மற்றும் அவர்களுக்குப் பின் வந்த பெரும்பாலான அறிஞர்கள் இந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களை சேர்த்து தொழுவதை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.
வேறுசில அறிஞர்கள் இரவிலும் பகலிலும் தொழும் உபரியான தொழுகைகளை இரண்டிரண்டாக தொழுவதையே ஏற்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கு இடையில் பிரிப்பதை அவர்கள் சரியானதாகக் கருதுகிறார்கள். இதுவே ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.