🔗

திர்மிதி: 429

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ»


429. நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், அஸருக்கு முன் தொழப்படும் நான்கு ரக்அத்களை இரண்டிரண்டாக பிரிக்கக்கூடாது என்று கூறுகிறார். இதற்கும் இந்த ஹதீஸையே ஆதாரமாக காட்டுகிறார். “ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் ஸலாம் கூறிப் பிரிப்பார்கள்” என்பதன் பொருள், இரண்டு ரக்அத்களுக்குப் பிறகு அத்தஹிய்யாத்-தஷஹ்ஹுத் இருப்பதே என்றும் அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்.

ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்) ஆகிய இருவரும், பகல் மற்றும் இரவுத் நேரத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகப் பிரித்துத் தொழவேண்டும் என்ற கருத்தில் உள்ளார்கள்.