كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ، قَالَ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ ” قَالَ شُعْبَةُ: وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ – أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ -»
பாடம்:
கழிப்பிடத்திற்குள் நுழையும் போது சொல்ல வேண்டியவை.
5. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸ்” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
அப்துல்அஸீஸ் அவர்கள் ஒரு தடவை இந்த பிரார்த்தனையை, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்றும், மற்றொரு தடவை, “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது மினல் குபுஸி வல்கபாஇஸ்” என்றும் கூறியதாக ஷுஅபா அவர்கள் கூறினார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகளில் மிகச் சரியானதும் அழகியதும் ஆகும். ஸை பின் அர்கம் (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் குளறுபடி உள்ளது.
ஹிஷாம் அத்தஸ்துவாஈ, ஸயீத் பின் அபூஅரூபா ஆகியோர் கதாதா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். இதில் ஸயீத் பின் அபூஅரூபா காஸிம் பின் அவ்ஃப் அஷ்ஷைபானீ ஸைத் பின் அர்கம் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். ஹிஷாம் அவர்கள் கதாதா ஸைத் பின் அர்கம் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
ஷுஅபா, மஃமர் ஆகியோர் கதாதா நள்ர் பின் அனஸ் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். ஷுஅபா அவர்கள் இதை ஸைத் பின் அர்கம் வழியாக அறிவித்துள்ளார். மஃமர் அவர்கள் நள்ர் பின் அனஸ் அவரின் தந்தை என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நான் முஹம்மத் பின் இஸ்மாயீல் (ஆகிய) புகாரி இமாமிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “கதாதா அவர்கள் இவர்கள் இருவரிடமிருந்தும் அறிவித்திருக்க வாய்ப்புள்ளது” என்று பதிலளித்தார்.