🔗

திர்மிதி: 55

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ


பாடம்:

அங்கத் தூய்மை (உளூ) செய்த பின் ஓத வேண்டியவை.

55. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ; அல்லாஹும் மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்” என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசலில் நுழைந்துக் கொள்ளலாம்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாக யாரும் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதி மொழிகிறேன். இறைவா! பாவமன்னிப்புக் கோரித் திருந்தியவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவாயாக! தூய்மையாளர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக!)

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

இந்த செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அனஸ் (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உமர் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி ஸைத் பின் ஹுபாப் அவர்களிடமிருந்து மாறுபட்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அவர்களும் மற்றவர்களும் முஆவியா பின் ஸாலிஹ் —> ரபீஆ பின் யஸீத் —> அபூஇத்ரீஸ் —> உக்பா பின் ஆமிர் (ரலி) —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், ரபீஆ —> அபூஉஸ்மான் —> ஜுபைர் பின் நுஃபைர் —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளனர். எனவே இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் குழப்பம் உள்ளது.

இந்தக் கருத்தில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வரும் எந்த பெரிய செய்தியும் சரியானதல்ல.

புகாரீ இமாம் அவர்கள், (இதில் இடம்பெறும்) அபூஇத்ரீஸ் அவர்கள் உமர் (ரலி) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.