🔗

திர்மிதி: 686

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம்:

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைப்பது வெறுப்பிற்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

686. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒருமுறை) அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது பொறித்த ஆட்டு இறைச்சி கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள், ‘உண்ணுங்கள்’ என்று கூறினார்கள். (அங்கிருந்த) மக்களில் சிலர் சாப்பிடாமல் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘நான் நோன்பு வைத்துள்ளேன்’ என்று கூறினார். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், (இது ரமளான் மாதத்தின் முதல் நாளா? அல்லது ஷஅபான் மாதத்தின் இறுதி நாளா? எனச்) சந்தேகத்திற்குரிய நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர், அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்’ என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான ஹதீஸ் அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது. மேற்கண்ட அம்மார் வழியாக வந்துள்ள ஹதீஸ் ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டுமென நபித்தோழர்கள், அவர்களுக்கு அடுத்துவந்த தாபிஈன் அறிஞர்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.

ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். மேலும் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு வைப்பது வெறுக்கத்தக்கதாகும் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த நாளில் ஒருவர் நோன்பு வைத்து அது ரமளான் மாதமாகவே இருந்தாலும் (அந்த நோன்பு செல்லாது). அதற்கு பகரமாக மற்றொரு நாளில் நோன்பு நோற்கவேண்டுமென அவர்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.